பிறந்தநாளும் அதுவுமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு ஓடிய ஜெயம் ரவி! அதிர்ச்சியில் ஆர்த்தி!
சென்னை: மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது. பிறந்தநாளான இன்று ஜெயம் ரவி, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி தமிழ் நடிகராக உள்ளார்.

சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டார். ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி நேற்று ஒரு அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே., நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications