ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: 43 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்..தமிழகத்தில் விஸ்வாஜித் முதலிடம்
சென்னை: ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 43 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர். தமிழகத்தில் விஸ்வாஜித் என்ற மாணவர் 100 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்.ஐ.டி ஆகியவற்றில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த தேர்வை என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும்.

கணிணி வாயிலாக நடத்தப்படும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்வை எழுத சுமார் 8 லட்சம் பேர் எழுதினார்கள். முதன்மை தேர்வுக்கான முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதன்பிறகு இந்த மாதம் 2-வது வாரத்தில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிங்கராஜூ வெங்கட் கவுன்டினியாவும், அதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கள்ளக்குரி சாய்நாத் ஸ்ரீமந்த், ராஜஸ்தானை சேர்ந்த இஷான் தேஷாங், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரதாப் சிங் ஆகியோர் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.கே.விஸ்வாஜித் என்ற மாணவரும் 100 சதவீத மதிப்பெண் பெற்று 24-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் முதல் இடம் பெற்றவர் இவர்தான். இரண்டு முறை நடந்த தேர்வில் எதில் சிறந்த மதிப்பெண் பெறப்பட்டிருக்கிறதோ அதை மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வர்கள் www.nta.ac.in, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications