க்ளுவே கிடைக்கலயே.. சிசிடிவியும் காணோமாம்.. கோனிகா கலர் லேப் வீட்டில் நுழைந்தது யார்.. திணறும் போலீஸ்
சாலிகிராமம் கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் கோனிகா கலர் லேப் உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை மட்டும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (65) கோனிகா கலர் லேப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் தனது மனைவி அருணா தேவியுடன் சென்னை சாலிகிராமத்தின் குமரன் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி தனது சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு சுப நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்.
பின்னர் 6 நாட்கள் கழித்து நேற்றிரவு சென்னை திரும்பியுள்ளார். வீட்டை திறக்க முயற்சிக்கையில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து உள்ளே சென்று பார்க்கையில், வீட்டிலிருந்து சுமார் 66 சவரன் நகை மற்றும் ரூ.13.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சந்தோஷ்குமார் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

விசாரணை
தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மண்டல இணை ஆணையர் மனோகர் மற்றும் துணை ஆணையர் குமார் ஆகியோர் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி முதற்கட்டமாக சோதனை செய்து வருகின்றனர்.

சிசிடிவி
இதில் ஈடுபட்டது யார்? தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா? வடமாநிலத்தவர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், உதவி ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகளையும் அமைத்துள்ளனர். ஏற்கெனவே பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு சவால் விடுவதை போல அமைந்திருக்கிறது. கடந்த மாதம் 10ம் தேதி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

பெரம்பூரிலும்
கொள்ளையர்கள் வெல்டிங் மெசின் மூலம் நகைக்கடைக்குள் ஓட்டை போட்டு 9 கி.கி தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடைக்குள் நுழையும்போது மங்கி குல்லா அணிந்து இருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அதேபோல நகைக்கடையின் சிசிடிவி பதிவுகளையும் திருடி சென்றுள்ளனர். எனவே கடைக்குள் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. மறுபுறம் கடைக்கு வெளியே மற்றொரு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் காரில் தப்பி சென்றது தெரிய வந்தது.

தடயம் இல்லாமல்
ஆனால் காரின் பதிவு எண் போலியானது என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு க்ளு மட்டும் போலீசுக்கு கிடைத்தது. அதாவது கொள்ளையர்கள் ஆந்திராவுக்குதான் தப்பி சென்றிருப்பார்கள் என்று தெரிய வந்தது. எனவே சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் தற்போது வரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications