நான் தான் இந்த ஏரியா போலீஸ்! ஆர்ம்ஸ் காட்டி ஆட்டையே போட்ட ‘லோக்கல் கை’! சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே, மருத்துவக் கல்லூரி மாணவியிடம், தன்னை போலீஸ் எனக்கூறிக்கொண்டு, 4 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை போன்ற நகர்புறங்களில், காதலர்கள் அல்லது தனியாகச் செல்லும் இளம் பெண்களை குறிவைத்து நூதன முறையில் சிலர் மிரட்டி கொள்ளையடித்து வருகின்றனர். ஒருசிலர் தங்களை போலீஸ் அதிகாரி எனக் கூறியும், பெற்றோர்களிடம் தகவல் கொடுத்து விடுவோம் என மிரட்டியும் காதலர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். அப்படியொரு சம்பவம், பூந்தமல்லி அருகே அரங்கேறியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த தில்லைவாயல், முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த கிருஸ்டல் டார்லியா என்ற பெண், காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு, தற்போது மருத்துவ பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

போலீஸ் என கூறிய நபர்
இந்நிலையில், தனது உறவினர் மகன் ஜிஜோ என்பவருடன் கல்லூரியில் இருந்து காரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். காரை நிறுத்தி, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை நசரத்பேட்டை அருகே நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன்னை போலீஸ் எனக் கூறிக்கொண்டு, இங்கெல்லாம் நின்று பேசக்கூடாது என இருவரையும் மிரட்டியுள்ளார்.

பெண்ணிடம் மிரட்டல்
மேலும், ஜிஜோவை சிறிது தூரம் மோட்டார் சைக்களில் அழைத்துச் சென்று நிற்க வைத்துவிட்டு, மீண்டும் கல்லூரி மாணவியிடம் வந்த அந்த நபர், சப்-இன்ஸ்பெக்டர் உங்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சப் -இன்ஸ்பெக்டர் வந்தால், நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக் கொள்வார் என்றும், எனவே, நகைகளை கழற்றி பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறும் அந்த மாணவியிடம், அந்த நபர் கூறியுள்ளார்.

நகையை பறித்து ஓட்டம்
இதனை உண்மையென நம்பிய மாணவி, உடனே தான் அணிந்திருந்த வளையல், கம்மல், செயின் என 4 சவரன் நகையை, கழற்றி கையில் வைத்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவிடம் அந்த நபர் பேசிக்கொண்டிருந்துள்ளார். திடீரென அந்த நபர், கல்லூரி மாணவி வைத்திருந்த 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில், அவர் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, இதுகுறித்து உடனடியாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் எனக் கூறி நகையை பறித்துச் சென்ற அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் உறவினருடன் பேசிக்கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவியிடம், போலீஸ்காரர் எனக்கூறிக்கொண்டு, 4 சவரன் நகையுடன் மர்ம நபர் தப்பியோடிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications