சங்கரய்யா வாழும் வரலாறு! ஆளுநர் முடிவை மறுபரிசீலனை செய்க! -கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு!
சென்னை: சங்கரய்யா என்பவர் வாழும் வரலாறு என்றும் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக JAC கூறியிருப்பதாவது;
''சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டமளிக்கும் ஒப்புதலில் கையெழுத்திட மறுத்துள்ள தமிழக ஆளுநர் அவர்கள் தனது முடிவை மறுபரிசிலனை செய்ய வேண்டுமென ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு கேட்டுக் கொள்கிறது.''

''விடுதலைப் போராட்டக் காலத்தில் 5 ஆண்டுகள், சுதந்திர இந்தியாவில் எளிய மக்கள் வாழ்வு ஏற்றமுற 4 ஆண்டுகள் என சிறை வாழ்க்கையை அனுபவித்தவர் என். சங்கரய்யா அவர்கள். விடுதலை வேட்கையின் காரணமாக வகுப்பை புறக்கணித்தால், தேர்வுவெழுத முடியாமல், பட்டப்படிப்பை தொடர முடியாத சூழலுக்கு உள்ளானவர். வாழும் வரலாறாக, ஒப்பில்லா சமூக களப் போராளியாக, இளைஞர்களின் போற்றத்தக்க முன்மாதிரியாக திகழ்பவர்.''
''நூற்றாண்டுகளைக் கடந்த மகத்தான சுதந்திர போராட்ட தியாகிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் பரிந்துரைத்ததன் அடிப்படையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சனநாயக அமைப்புகளான செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவை ஒருமனதாக, என். சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் அவர்களின் ஒப்புதலக்காக அனுப்பப்பட்டதை, தமிழக ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுத்திருப்பது வருந்தத்தக்கது.''
''80 ஆண்டுகளாக சாதாரண ஏழை, எளிய மக்களின் துயரைப் போக்க ஓயாத குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும் என். சங்கரய்யா அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றில் ஒரு நீங்கா புகழை நிச்சயம் பெறும். எனவே, தமிழக ஆளுநர் அவர்கள் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.''












Click it and Unblock the Notifications