என் ரத்தம் "கொதிக்கிறது.." தவறு நடக்கிறது.. காங்கிரஸ் தலைவர்கள் மீது ஜோதிமணி பகீர் குற்றச்சாட்டு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை என்று அந்தக் கட்சியின் லோக்சபா உறுப்பினர் ஜோதிமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைக் செவிமடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்னமும் பெயர்ப்பாளர் தேர்வு முடிந்தபாடு இல்லை. இந்த வேட்பாளர் தேர்வில் பல தில்லுமுல்லுகள் நடப்பதாக ஜோதிமணி இன்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
நிறைய தவறு நடக்கிறது
காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
பணம்தான் முக்கியமோ
பணம்தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
ரத்தம் கொதிக்கிறது
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு. இவ்வாறு ஜோதிமணி கூறியுள்ளார்.
|
பகிரங்க குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர்கள் என குறிப்பிட்டு வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடப்பதாக அந்த கட்சியின் எம்.பி. ஒருவரே பகீர் குற்றச்சாட்டை, பகிரங்கமாக முன் வைத்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.