என்னம்மா கேவலமா பேசறியே என்பதற்கும்.. நீ கேவலமான பெண் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.. கஸ்தூரி கோபம்
எம்பி ஜோதிமணிக்கு நடிகை கஸ்தூரி தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்
சென்னை: "என்னமா, கேவலமா பேசறியே" என்று கேட்பதற்கும் " நீ கேவலமான பெண்'' என்பதற்கும் அபாயகரமான வித்தியாசம் உள்ளது.. ஜோதிமணியின் கண்டனத்துக்குரிய சர்ச்சை பேச்சு மறந்து, நாகராஜன் அவர்களின் சொல் மட்டுமே நினைவில் நிற்கிறது... கொரோனா வைரஸைவிட கடுமையான நோய் நாகராஜுக்கு உள்ளது.. அது பெண் என்ற விஷயத்தை வைத்தே சிறுமைப்படுத்துவது என்ற நோய்தான்.. இந்த நோய் உள்ளவர்களை உடனடியாக அவர் கட்சி தலைமை 'quarantine ' செய்து, நடவடிக்கை என்ற மருந்தை பயன்படுத்தினால், கட்சியின் மானம் சிறிதளவாவது தப்பிக்கும் என்று நடிகை கஸ்தூரி ஆதங்கம் நிறைந்த ஒரு பதிவினை வெளிப்படுத்தி உள்ளார்.
Recommended Video
நேற்று நியூஸ் 7 டிவி நிகழ்ச்சியில் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பிரச்சினை பற்றிய விவாதத்தில், ஜோதிமணி பேசும்போது, பிரதமர் மோடியை தாக்கி பேசியிருந்தார். அதேபோல, பாஜகவின் சார்பில் பங்கேற்ற கரு.நாகாஜன் "நீ கேவலமான பெண்'' என்று ஜோதிமணியை விமர்சித்து பேசினார். இது தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி வழக்கம்போல் துணிச்சலான ஒரு பதிவை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவு இதுதான்:
"நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில், பாஜகவின் கரு நாகராஜன் அவர்கள் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீது தொடுத்த தனி மனித தாக்குதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பிரச்சினை பற்றிய விவாதத்தில், முதலில் செல்வி ஜோதிமணி பிரதமர் மோடியை தாக்கி, கல்லடி என்றெல்லாம் வன்சொற்களால் வரம்பு மீறி பேசினார். உண்மைதான்.அதனால் உணர்ச்சிவசப்பட்ட கரு நாகராஜன் அவர்கள், வார்த்தையை கொட்டிவிட்டார்.
"என்னமா, கேவலமா பேசறியே" என்று கேட்பதற்கும் " நீ கேவலமான பெண்'' என்பதற்கும் அபாயகரமான வித்தியாசம் உள்ளது. வார்த்தைகளை கொட்டிவிட்டால், பிறகு அள்ளவா முடியும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, பேச்சில் பிழை வந்துவிட்டால் , உங்கள் வாதம் தோற்று விடுமே. இன்று தோற்றுதான் விட்டது. ஜோதிமணியின் கண்டனத்துக்குரிய சர்ச்சை பேச்சு மறந்து, நாகராஜன் அவர்களின் சொல் மட்டுமே நினைவில் நிற்கிறது.
இதற்கு அங்கேயே அப்பொழுதே திரு நாகராஜன் அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அப்போதே விளக்கம் அளித்து இருக்கவேண்டும். "வாய் தவறி சொல்லிவிட்டேன், பெண்ணை சொல்லவில்லை, அவர் பேச்சை சொன்னேன்" என்று சொல்லியிருந்தால், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நெறியாளர் நெல்சன் எடுத்து கூறியும் , மற்ற பங்கேற்பாளர்கள் சொல்லியும் அவர் காதிலேயே போட்டு கொள்ளவில்லை.
கொள்கைரீதியாக, அரசியல் ரீதியாக எத்தனையோ கருத்து வேறுபாடு இருக்கலாம். அதை கருத்து ரீதியாக கையாள முடியாமல் கொச்சையாக பேசுவதா? யாராக இருந்தாலும் எவ்வளவு உணர்ச்சி வச பட்டாலும் சபை நாகரிகத்தை மறக்க கூடாது, அதிலும் ஒரு பெண்ணை , அவரை பெண் என்ற விஷயத்தை வைத்தே சிறுமைப்படுத்துவது நம் நாட்டில் பல ஆண்களுக்கு உள்ள நோய். Coronavirus ஐ விட கடுமையான நோய். அந்த நோயால் நாகராஜன் அவர்களும் பீடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
இந்த நோய் உள்ளவர்களை உடனடியாக அவர் கட்சி தலைமை 'quarantine ' செய்து, நடவடிக்கை என்ற மருந்தை பயன்படுத்தினால், கட்சியின் மானம் சிறிதளவாவது தப்பிக்கும். சில மாதங்கள் முன்பு வரை தமிழக பாஜகவின் தலைவியும் ஒரு ஆற்றல் மிக்க பெண்மணி என்பதை அதற்குள் பாஜகவினர் மறந்துவிட்டார்களா? இன்றைய நிகழ்வுக்கு பாஜக பெண் உறுப்பினர்களும் தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
எதிர்பாராத அதிர்ச்சிகரமான தாக்குதலை ஜோதிமணி தனக்கு சாதகமாக்கி கொண்டார். தனி மனித தாக்குதல் அவருக்கு புதிதல்ல; அதை தாண்டி வரும் வைராக்கியமும் மன வலிமையும் அவருக்கு அதிகமாகவே உண்டு. பொது வாழ்க்கையில் போராடிவரும் எத்தனையோ பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் ஜோதிமணிக்கு என்னுடைய வாழ்த்துக்களும் ஆதரவும் எப்போதும் உண்டு. என்னோடு பலரும் உண்டு" என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications