தமிழக அரசு சார்பில் சென்னையில் இதழியல் கல்லூரி.. ரூ.1.10 லட்சம் வழங்கிய பத்திரிகையாளர் குணசேகரன்
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் மு. குணசேகரன் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2025-26-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடக கல்வி மேம்பாட்டுக்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன்மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கிடும் வகையிலும் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Chennai Institute of Journalism) நடப்பு கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னை இதழியல் கல்வி நிறுவனம்
இதன்படி, சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் 'சென்னை இதழியல் கல்வி நிறுவனம்' அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.7.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில் ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டய படிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் இங்கு பயிற்றுவிக்கப்படும்.
பிரிண்ட், டெலிவிஷன், ரேடியோ மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்நிறுவனத்தின் பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாறி வரும் டிஜிட்டல் யுகத்தில், அடுத்த தலைமுறையினர் தங்களை தயார் செய்துகொள்ள உதவும் வகையில் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த இதழியல் கல்வி நிறுவனத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டய படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.
சென்னை இதழியல் கல்லூரியை முதலமைச்சர் @mkstalin இன்று தொடங்கி வைத்தார். எனது ஆசானும் தினமணி மேனாள் ஆசிரியருமான இராம.திரு.சம்பந்தம் நினைவு அறநல்கை தொடங்க, எனக்கு ராம்நாத் கோயங்கா விருதுடன் வழங்கப்பட்ட பரிசுத்தொகையுடன் சேர்த்து, ரூ.1.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரிடம்… pic.twitter.com/dL7VQCBdSf
— மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) August 25, 2025
இந்த நிகழ்ச்சியில், சன் நியூஸ் தலைமை ஆசிரியர் மு. குணசேகரன், ராம்நாத் கோயங்கா விருது பெற்றார். அப்போது ஆசிரியர் மு. குணசேகரன் தனக்கு தரப்பட்ட பரிசுத்தொகை ரூ.1 லட்சத்துடன் சேர்த்து, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தனது ஆசான் இராம. திரு. சம்பந்தம் நினைவு அறநல்கை அமைக்க முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
மாணவர்களின் கல்விக்கு செலவிடப்படும்
இதழியல் துறையில் முன்னோடியாக விளங்கிய, தினமணி முன்னாள் ஆசிரியர் இராம திரு சம்பந்தம் பெயரில் ஆண்டுதோறும் விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்கு இந்நிதி செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கல்லூரியின் தலைவரும் தி ஹிந்து நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான என்.ரவி நன்றி தெரிவித்தார்.
இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications