“அதான் மதுரை மாநாட்டிலேயே தெரிஞ்சுடுச்சே! அப்புறம் தேவர் பூஜைக்கு வேற எதுக்கு..?” சிக்கலில் இபிஎஸ்
சென்னை: வரும் 30ம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜஜை விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில் இவர் எத்தனை குருபூஜைக்கு சென்றாலும், முக்குலத்தோர் இவரை மன்னிக்க மாட்டார்கள் என பத்திரிகையாளர் பிரியன், ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30 தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த பூஜையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்த பின்னர் தென் மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்க தொடர்ந்து முயன்று வருகிறார். இதற்காகதான் சமீபத்தில் மதுரையில் மாநாட்டை நடத்தினார். அதேபோல சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தையும் நடத்தியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடியின் இந்த முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்கிற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு ஒன்இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் பிரியன் விளக்கமளித்துள்ளார். அதாவது, "தென் மாவட்டங்களில் அவருக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு ஆதரவு கிடைப்பது சந்தேகம்தான். மதுரை மாநாட்டில் எதிர்பார்த்த கூட்டம் வேறு வந்த கூட்டம் வேறு. அதான் புளிசாதம் மீந்து விட்டதே. சங்கரன்கோயில் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே பாதி கூட்டம் கழன்றுவிட்டது. இப்படி இருக்கையில் இந்த வருடம் குருபூஜைக்கு அவர் போகலாம் ஆனால் அதற்காக அவருக்கு எதிர்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.
ஏனெனில் முக்குலத்தோர் அந்த அளவுக்கு அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அவ்வளவு சீக்கிரம் அந்த கோபம் தனிந்துவிடாது. ஏனெனில் சசிகலாவுக்கு துரோகம் செய்துவிட்டார், அதேபோல டிடிவி தினகரனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் துரோகம் செய்திருக்கிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பிரித்துக் கொடுத்து தென் மாவட்டங்களில் உள்ள 60% சமூகங்களின் கோட்டாக்களை சுருக்கி விட்டார். எனவே முக்குலத்தோர் சமுதாயம் இவர் மீது பெரும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறது. ஒரு காலத்தில் முக்குலத்தோர் காங்கிரஸில் இருந்தார்கள் பின்னர் திமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் அணி திரண்டார்கள் சசிகலா, நடராஜனுக்காக ஒட்டுமொத்த முக்குலத்தோர் கம்யூனிட்டியும் ஜெயலலிதா பின்னாடி அணி திரண்டது. பின்னர் ஓபிஎஸ் வசம் சென்றது.
தற்போது கூட திமுகவில் ஐந்து முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய மக்கள் தொகைக்கு இது சரியான விகிதாச்சாரமா? என்கிற கேள்விக்குறி இருந்தாலும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு திமுகவில் இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் சமுதாய தலைவர்களுக்கு துரோகம் செய்துவிட்டார். நிச்சயமாக இவருக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு கிடைக்காது. தென் மாவட்டங்களில் சிவகங்கை, தென்காசி, இராமநாதபுரம், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்கு வங்கி இருக்கிறது.
தென் மாவட்டங்களில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராமநாதபுரம் சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருக்கிறார். தற்போது ஓபிஎஸும் வெளியே இருப்பதால் எடப்பாடி எத்தனை குருபூஜைக்கு சென்றாலும் முக்குலத்தோரின் வாக்குகளை பெறுவதற்கு வாய்ப்பில்லை. அதேபோல உதயகுமார் செல்லூர் ராஜு ஆகியோரை ஒரு தலைவராகவே முக்குலத்தோர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எடப்பாடி செய்த துரோகம்தான் அவர்கள் முன்னே இருக்கிறது.
ஒருவேளை டிடிவி தினகரன் பாஜகவுடன் இணைந்து இருந்தால் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள், சிலர் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எடப்பாடி தனியாக நின்றால் அவருக்கு வாக்கு கிடைப்பது சந்தேகம்தான். பாஜகவுடன் சேர்ந்திருந்தாலும் கூட இவருக்கு ஓட்டு போடுவது மிகவும் குறைவாகத்தான் இருக்கும் எனவே எடப்பாடி பழனிசாமி தேவர் குருபூஜைக்கு போவதும் ஒன்றுதான் போகாமல் இருப்பது ஒன்றுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications