“சூப்பரா செயல்பட்டிருக்கீங்க”.. ஞானசேகரன் வழக்கில் காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக நடத்திய காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு 30 வருடங்கள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு 29 சாட்சியங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. தொடர்ந்து இந்த வழக்கில் ஞானசேகரன் எதிராக 11 குற்றச்சாட்டுகளின் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி கடந்த மே மாதம் 28ஆம் தேதி தீர்ப்பளித்தார். மேலும் ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, தனக்கு தந்தை இல்லை, தாய் மட்டுமே இருக்கிறார் என்றும், அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்றும் ஞானசேகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனக்கு 8ஆவது படிக்கும் பெண் குழந்தை உள்ளார் என்றும், தனக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி, அதாவது இன்றைக்கு அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார். இந்த நிலையில், ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு ரூ.90,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக நடத்திய காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி விரைவாக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த 5 மாதங்களில் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட்டு, தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மிக விரைவாக நீதியை நிலைநாட்டியதற்காக காவல்துறை, நீதித்துறையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications