விஜய் தரும் ட்விஸ்ட்.. நாளைக்கு பாருங்க சஸ்பென்சா இருக்கும்.. அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் பேட்டி
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு அதிமுகவின் ஒரு பிரிவினர் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். கட்சிதாவல் விதிகளின் படி மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் மாறினால், கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பது எத்தனை பேர், எஸ்பி வேலுமணி தரப்பை ஆதரிப்பது எத்தனை பேர் என்பது தெரியாமல் உள்ளது. இந்த சூழலில் லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் பேட்டி அளிக்கும் போது, "நாளைக்கு பாருங்க சஸ்பென்சா இருக்கும்..." என்று சூசகமாக கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்ற நிலையில் விசிக,இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸ் அதரவுடன் ஆட்சியை பிடித்தது. மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்று விட்டார்.நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாமே விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க (தேமுதிக தவிர) உள்ளன. இதுவரை தவிர அதிமுகவில் ஒரு அணியும் விஜய்யை ஆதரிக்கப்போவதாக கூறியுள்ளது. எனவே விஜய் எளிதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வது உறுதியாகி உள்ளது.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவைவிட குறைந்த இடங்களிலேயே வென்ற காரணத்தால், 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் சட்டசபையில் இழந்துள்ளது. அதிமுகவில் முக்கிய தலைவர்கள் பலர் தவெகவில் இணைந்து முக்கிய பதவியில் இருக்கிறார்கள். இதனால் அதிமுகவில் ஒரு தரப்பினர், ஆதரவு இல்லாமல் விஜய் தடுமாறிய போது, தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அப்போது கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் தட்டுத்தடுமாறி விஜய் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை வைத்தே ஆளுநரிடம் மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வராகிவிட்டார். விஜய் மெஜாரிடிக்கு தவித்து நின்ற போது, அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் எளிதாக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்திருக்க முடியும்.. ஏற்கனவே ஐந்து வருடங்கள் ஆட்சியில் இல்லை.. லோக்சபா மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்துள்ளோம். இப்போது சட்டசபை தேர்தலிலும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். தவெக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருக்கலாம் என்பது அதிமுகவில் ஒரு பிரிவினரின் கருத்தாக உள்ளது.
இது ஒருபுறம் எனில், அதிமுக எதிர்க்கட்சியாக வரமுடியாத அளவிற்கு தோற்றுப்போனதால், எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் வலியுறுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி சட்டசபை தலைவராகவும் எஸ்.பி.வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அத்துடன் நான்தான் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் என்றும் உறுதியாக முடிவு செய்துள்ளார். அவருக்கு சில மாவட்ட செயலாளர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அதோடு அவர்கள் பெரும்பாலான அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது, எனவே அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக எஸ்.பி.வேலுமணிதான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அவர்கள் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு அவர்கள் விஜய்யின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின்போது த.வெ.க.வுக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் இடம் பெறவும் முடிவு செய்துவிட்டார்கள். இன்று முதல்வர் விஜய்யை சிவி சண்முகம் நேரில் சென்று சந்திக்க உள்ளார். தவெகவிற்கு வேலுமணி சிவி சண்முகம் அணி முழுமையாக ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டது.
இதனிடையே நேற்று பேரவை கூட்டம் முடிந்தவுடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற குழு தலைவராகவும், ஓ.எஸ்.மணியனை துணைத்தலைவராகவும் நியமித்து அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்டு கடிதம் வழங்கியிருந்தார்கள். அந்த கடிதம் கட்சி தலைவரின் கடிதமாக மட்டுமே இருந்தது. எனவே அதில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து இல்லாமல்இ ருந்தது.
இதற்கிடையே நேற்று மாலை 6.10 மணிக்கு சி.வி.சண்முகம், வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், காமராஜ், இசக்கி சுப்பையா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் 'அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமித்து எம்.எல்.ஏ.க்கள் மட்டும் கையெழுத்து போட்டு கடிதம் கொடுத்திருந்தனர்.
அந்த கடிதத்தில் 9-ந் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் எஸ்.பி.வேலுமணியை தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக 9-ந் தேதி நடந்த கூட்டத்தில் கட்சியின் கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும்' கூறியிருந்தார்கள்.
இந்த பஞ்சாயத்து ஒருபுறம் எனில், அதிமுவை வேலுமணி முழுமையாக கைப்பற்றவேண்டும் என்றால் 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் தான் சட்டமன்றத்தில் சாத்தியம். அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. தற்போதைய கேள்வி என்னவென்றால், லாட்டரி மார்டினின் மனைவியான லீமா ரோஸின் நகர்வுகள் எப்படி என்பதுதான்.
லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஏற்கனவே தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியவர். இவர் தவெக உடன் கூட்டணி அமைக்க ஆதரவும் தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை பார்க்க முதல்வர் விஜய் அவரது இல்லத்திற்கே செல்ல உள்ளதாக கூறினார். மதியம் 2 மணிக்கு விஜய், சிவி சண்முகத்தை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications