அமைச்சராக இருந்தால் என்ன வேணாலும் செய்வீங்களா? செந்தில் பாலாஜியை சுருக்குனு கேட்ட நீதிபதி ஓகா!
சென்னை: செந்தில் பாலாஜி இப்போது அமைச்சராக இல்லை, அவரால் ஆதாரங்களை அழிக்கவும் முடியாது, அமலாக்கத் துறை விசாரணையில் தலையிடவும் முடியாது என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்த நிலையில், அப்போ செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிட முடியும் என ஒப்புக் கொள்கிறீர்களா என்று பொருள்படும்படியாக உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கு மேலாகியும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன் வைக்கிறது என்றார். அப்போது அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு உதவி வருகிறது. இந்த வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை முடிக்கவில்லை. இதில் செந்தில் பாலாஜி தரப்பில் 13 முறை இந்த வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை ஒரு முறை கூட அவ்வாறு கேட்டதில்லை. எனவே விசாரணை தாமதமாவது குறித்து தனியாக நாங்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம் என வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது அமலாக்கத் துறை வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. எங்களை பொருத்தவரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும் என கேள்வி எழுப்பினார். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் செந்தில் பாலாஜியின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு, இந்த வழக்கின் விசாரணை எப்போது நிறைவடையும் என கேட்கும் நிலைக்கு அமலாக்கத் துறை உள்ளது.
ஆனால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை, விசாரணையே தொடங்காத நிலையில் அவரை எத்தனை நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியும். 13 மாதங்களாக சிறையில் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்படவில்லை.
விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரியவில்லை. சிறையில் இருக்கும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. முன்பு அவர் அமைச்சராக இருந்தார், ஆனால் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை. எனவே அவரால் சாட்சிகளை கலைக்கவும் முடியாது, விசாரணையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தவும் முடியாது என முகுல் ரோத்தகி வாதத்தை முன் வைத்தார்.
இப்படியாக அமலாக்கத் துறையும் செந்தில் பாலாஜி தரப்பும் சீரியஸாக வாதம் செய்துக் கொண்டிருந்த போது நீதிபதி ஓகா , காமெடியாக ஒரு கேள்வியை கேட்டார். அதாவது அவர் கேட்கையில், செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்பதால் அவரால் அமலாக்கத் துறை விசாரணையில் குறுக்கிட முடியாது என்கிறீர்கள்.
அப்படியென்றால் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை ஒன்றுமில்லாமல் ஆக்க முடியுமா என நீதிபதி ஓகா கேள்வி எழுப்பினார். அதாவது அமைச்சராக இல்லாததால் அவரால் சாட்சிகளை கலைக்க முடியாதுனு சொல்றீங்களே, ஒரு வேளை அவர் அமைச்சராக இருந்தால் சாட்சிகளை விலைக்கு வாங்கி, விசாரணைக்கு முட்டுக் கட்டை போட முடியுமா? என முகுல் ரோத்தகியிடம், நீதிபதி கிண்டலாக கேட்டார்.












Click it and Unblock the Notifications