டுவிஸ்ட்.. வடிவேலுக்கு போலி டாக்டர் பட்டம்? அண்ணா பல்கலையில் பகீர்.. நீதிபதி வள்ளிநாயகம் விளக்கம்
“நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்னவென்று தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன்.”
சென்னை: நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்தே ஒரு கும்பல் போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய மோசடி செய்த சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், நீதியரசர் வள்ளிநாயகம் அது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் இசை அமைப்பாளர் தேவா ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்து உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகத்தை இருவருக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு
இந்த செய்திகளும் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், இருவருக்கும் வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்பது உறுதியாகி இருக்கிறது. வடிவேலுவுக்கும் தேவாவுக்கும் டாக்டர் பட்டத்தை தாங்கள் வழங்கவில்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் மறுத்து இருக்கிறார்.

கவுரவ டாக்டர் பட்டம்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சில அமைப்புகள் உணவகங்களில் வைத்து விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதுபோன்ற நிகழ்ச்சி என்று நினைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கி இருக்கிறார்கள். ஆனால், அதில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை பயன்படுத்திய கண்டிக்கத்தக்கது.

ஓய்வுபெற்ற நீதியரசர்
எனக்கு தெரிந்து ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் வள்ளிநாயகம் அவர்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். அவரிடம் சென்று அண்ணா பல்கலைக்கழக வளாகம் என்று அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கலாம். எங்களிடம் மருத்துவர் வள்ளிநாயகம் வருவதாக சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்து உள்ளோம்.

போலீசிடம் புகார்
அவர்கள் இருவரையும் வித்தியாசமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க விசயம். நாங்கள் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். போலீசாரிடம் புகாரளித்து உள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழமைவாய்ந்த, பெருமையான அரங்கம்.

வருத்தம் தெரிவித்த துணை வேந்தர்
இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இதுபோன்ற செயல்களை இனி யாரும் செய்யக்கூடாது என்பதற்கு ஏற்ப கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். டீனுக்கு முதலில் கடிதத்தை பார்த்தவுடன் முன்னாள் நீதிபதி பெயர் இருந்ததால் அனுமதி கொடுத்துவிட்டார்.

போலி கடிதமா?
அந்த கடிதத்தை கொடுத்தவர் குறித்தும் விசாரிக்க வேண்டும். இது வள்ளிநாயகம் கொடுத்த கடிதமா அல்லது அதுவும் போலியா என்று தெரியவில்லை. அதில் இந்திய அரசு முத்திரை இருந்தது. ஒவ்வொரு விசயத்தையும் ஆராய்ந்து செய்ய முடியாது. நீதிபதி வள்ளிநாயகத்திடம் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.

யார் அந்த ஹரிஷ்?
ஹரிஷ் என்ற நபர் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பில் இருந்து டாக்டர் பட்டம்போல் கொடுத்து இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் வழங்குவதுடன் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுரவ டாக்டர் பட்டத்தை ஒரு பல்கலைக்கழகம்தான் கொடுக்க வேண்டும்." என்றார்.

நீதிபதி வள்ளிநாயகம் விளக்கம்
இந்த நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி செல்போன் வாயிலாக ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், "நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்னவென்று தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன்.

நான் பொறுப்பில்லை
நான் அந்த நிகழ்வில் பங்கேற்றேன் என்று சாட்சி சொல்கிறேன். அவ்வளவுதான். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் வந்தேன். நான் அந்த பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடந்துகொண்டேனா? அவர்கள் செய்தது தவறு என்றால் தவறுதான். நான் அதற்கு எந்த வகையிலும் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications