தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்.. பழனிகுமார் ஓய்வையடுத்து தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்துவது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தற்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக உள்ள பழனிக்குமார் ஐ.ஏ.எஸ்-ன் பணிக்காலம் இன்றோடு நிறைவடைந்துள்ளதால், தேர்தல் ஆணையராக நியமிக்கப்படப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஒப்புதலையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. அவர் இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில் 2 மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவருக்கு மாநில தேர்தல் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications