“இது முதலமைச்சரின் அதிகாரம்” ஆளுநருக்கு எதுக்கு இந்த வேலை? இலாகா மாற்ற விவகாரத்தில் சிபிஎம் கண்டனம்!
சென்னை: அமைச்சர்களின் துறைகளை தீர்மானிப்பதும், மாற்றுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு நடத்தியது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்ல முயல்கையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். மேலும், உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அதேபோல அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இவரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இவர் வகித்து வந்த இலாகாவை மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி, மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பரிந்துரை கடிதத்தை ஏற்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "அமைச்சர்களின் துறைகளை தீர்மானிப்பதும், மாற்றுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம். இதில் ஆளுநரின் ஒப்புதலுக்கான அவசியமே இல்லை. துறை மாற்றம் பற்றிய தகவலை ஆளுநருக்கு தெரிவிப்பது ஜனநாயக மரபின் வெளிப்பாடு.
பாஜக ஆளுநரோ, அரசியல் நோக்கத்துடன் தன்னிடம் இல்லாத அதிகாரத்தை முயற்சித்து மூக்கை உடைத்துக் கொண்டிருக்கிறார். இந்தமுறை அவரால் தமிழ்நாட்டில் அரங்கேற்றும் நாடகம் இங்கேதான் முதல்முறை அரங்கேறுவதல்ல. பாஜகவின் எதேச்சதிகார நோக்கத்தின் வெளிப்பாடு. ஏற்கனவே கேரளத்திலும் முயற்சித்து அம்பலப்பட்டு அடிபட்டது. தமிழ்நாட்டு மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், "அரசியல் சட்டப்பிரிவு 163-ன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் கடமையாற்ற வேண்டும்" என்று சட்ட வல்லுநர்களும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications