அதிமுகவின் இரு அணிகள் இணைய உதவினேன்.. என்னை விளக்கமே கேட்காமல் நீக்கினார்கள்.. கேசி பழனிசாமி ஆதங்கம்
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய நான் பாடுபட்டேன். ஆனால் என்னை விளக்கமே கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி, பதில் வடிவில்:

கே: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த உங்களை கட்சியை விட்டு நீக்கியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து நாம் செயல்பட வேண்டும் என்ற கருத்தை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான் ஒரு டிவி விவாதத்தில் முன்வைத்தேன். நான் எதன் அடிப்படையில் சொன்னேன் என்றால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வைத்த கோஷம் மோடியா, லேடியா என்பதுதான். அதில் அதிமுக வென்றது. 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தது. பாஜகவில் விஜயகாந்த்தை முன்னிறுத்தி ஒரு கூட்டணி அமைந்தது. அதிமுகவோ தேமுதிகவும் வேண்டாம் பாஜகவும் வேண்டாம் என தனது தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டார்கள். அப்படியிருக்கும் போது இதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு எந்த செயற்குழுவிலோ, பொதுக் குழுவிலோ அல்லது மேல் மட்டத்திலோ இதுதான் அதிகாரப்பூர்வமான கருத்து என எதையும் அறிவிக்கவில்லை.
பாஜக மத்தியில் ஆளும் கட்சியாக உள்ளது. அவர்கள் தமிழகத்தில் காலூன்ற விரும்புகிறார்கள். அவர்கள் ஹிந்துத்துவா, திராவிடம் என்ற ரீதியில் தமிழகத்தில் அரசியலை கட்டமைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். நாம் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகமோ அதிமுகவின் முக்கியத்துவத்தை கெடுப்பதற்காக திமுக வெர்சஸ் பிஜேபி என்ற நிலையை உருவாக்குகிறார்கள். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. தேவைப்படும் போது தமிழ்நாட்டின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தேன். இந்த கருத்தை தெரிவித்ததற்கு என்னை அழைத்து ஒரு விளக்கத்தை கேட்டிருக்கலாம், இல்லாவிட்டால் இது எனது சொந்த கருத்து என சொல்லியிருக்கலாம். ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி பிரிந்திருந்த போது ஓபிஎஸ், இந்த அணிகள் இணைப்புக்கு நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என என்னிடம்தான் சொன்னார். அதிமுக இணைப்பில் 90 சதவீத பணிகளை நான்தான் செய்தேன், கடைசி 10 சதவீதம் கொடுக்கல் வாங்கலின் போதுதான் தள்ளி நின்றேன். அந்த அளவிற்கு அணிகள் இணைப்பிற்கு உருதுணையாக இருந்த என்னை தொலைபேசியில் கூட எந்த விளக்கமும் கேட்காமல் என்னை நீக்குவதாக அறிவித்தார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் தொலைபேசியில் பேசி ஓபிஎஸ்ஸை பார்க்குமாறும் நீக்க உத்தரவை நீக்கிவிடலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் கேபி முனுசாமியோ என்னை மன்னிப்பு கடிதம் எழுதி தருமாறு கேட்டார். நான் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கடிதம் எழுதி தரமாட்டேன் என்றேன். கேசி பழனிசாமி இந்த இயக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தால் கேபி முனுசாமிக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைத்து முனுசாமி இப்படி செய்ததை ஓபிஎஸ் உணர்ந்தார். நான் சென்னையில் இருந்ததால் என்னை உடனடியாக தலைமை செயலகத்திற்கு வருமாறு ஓபிஎஸ் அழைத்தார். உடனே என்னை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு 10, 12 அமைச்சர்கள் இருந்தனர். உடனே நான் நடுவில் , இரு புறமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் நின்று கொண்டு போட்டோ எடுத்தார்கள். அப்போது செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது எனது நீக்கத்தை ரத்து செய்துவிடுவார்கள் என நினைப்பதாக தெரிவித்தேன்.
இந்த நிகழ்வின் போது எஸ் பி வேலுமணி இல்லாததால் நான் வந்தால் அவருக்கு போட்டியாக இருக்குமோ என நினைத்தாரோ என்னவோ எனது நீக்கத்தை ரத்து செய்யக் கூடாது என பல உள்ளடி வேலைகளை பார்த்தார். இதையடுத்து இரு தினங்கள் கழித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், கேசிபியை இணைத்துவிட்டீர்களா என கேட்ட போது நாங்கள் இணைக்கவில்லை, அவர்தான் இணைந்துவிட்டதாக தெரிவித்தார் என கூறிவிட்டார். என்னை பொருத்தவரையில் என்னை நீக்க இவர்களுக்கு அதிகாரமே கிடையாது. கட்சியின் நிலைப்பாடு என்பது நான் சொன்னதுதான். இன்றைய தினமும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என தொண்டர்களும் கருதுகிறார்கள். இதுதான் மிகச் சரியானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

கே: ஈபிஎஸ்- ஓபிஎஸ் எனும் இரட்டை தலைமை சரியாகவராது என ஒரு வழக்கை தொடர்ந்தீர்கள், அது எந்த அளவில் இருக்கிறது?
ப: ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமை சரியாக வராது என்பதல்ல அந்த வழக்கு. சசிகலா முதல் முதலாக பொதுச் செயலாளராக பொதுக் குழுவால் நியமிக்கப்பட்டார். நான் 1972 ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்துடன் ஐக்கியமாகியுள்ளேன். எம்ஜிஆர் மன்றத்திலிருந்து அதிமுகவுக்கு வந்துள்ளேன். இதனால் கட்சியின் நடைமுறைகள் எனக்கு தெரியும். அந்த காலத்தில் இருந்தே பொதுக் குழுக்களில் நான் நிறைய கலந்து கொண்டுள்ளேன். இதனால் நான் என்ன சொன்னேன் என்றால் , பொதுச் செயலாளர் என்பது அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பொதுக் குழுவுக்கு பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கிடையாது. சசிகலா என்ற தனிமனிதரை நான் எதிர்க்கவில்லை. அந்த நியமனம் தவறு என சொன்னேன். பொதுச் செயலாளருக்கு தேர்தல் அறிவியுங்கள் என்றேன். யாரெல்லாம் போட்டியிடுகிறார்களோ அவர்கள் எல்லாம் போட்டியிடட்டும். யாரை தொண்டர்கள் ஏற்கிறார்களோ அவர் பொதுச் செயலாளராக இருக்கட்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் நான் மனு தாக்கல் செய்திருந்தேன்.
சசிகலா பெயரை பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தவர் ஓபிஎஸ், வழிமொழிந்தவர் ஈபிஎஸ். இதையடுத்து சசிகலா கொடுத்த உத்தேச அமைச்சரவை பட்டியலில் ஓபிஎஸ் பெயர் இல்லை என்பதால் தர்மயுத்தம் தொடங்கினார். இதையடுத்து ஓபிஎஸ், செம்மலை போன்றோர் டெல்லியில் பொதுச் செயலாளர் என்பவர் அடிப்படை உறுப்பினரால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என மனு செய்திருந்தனர். இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்தது. அப்போது அணிகள் இணைப்பின் போது விதிகளை இவர்கள் திருத்தினார்கள். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுக் குழு நடப்பதற்கு முதல் நாள், ஓபிஎஸ், நான், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகிய 5 பேர் ஒருபுறமும் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன் போன்ற 10, 12 அமைச்சர்கள் மறுபுறமும் இருந்தனர். அப்போதுதான் விதியை திருத்தி பொதுச் செயலாளரை பொதுக் குழு கூட்டி நீக்குவது, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறிப்பது என சிவி சண்முகம் தெரிவித்தார். அப்போதே நான் எதிர்ப்பை பதிவு செய்தேன். முதல்வர் அறையில் நாம் வாக்குவாதம் செய்ய வேண்டாம் என செங்கோட்டையன் சொன்னார், அதனால் நாங்கள் திரும்ப வந்துவிட்டோம். அடுத்த நாள் பொதுக் குழுவுக்கு என்னை அழைக்கவே இல்லை. காரணம் நான் இவர்களது திருத்தத்திற்கு மறுப்பு தெரிவித்ததால்!
Recommended Video
பின்னர் தேர்தல் ஆணையத்தில் அந்த வழக்கு வந்த போது, மதுசூதனன் தலைமையில் இருக்கும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்த அதிமுகவுக்கு இரட்டை இலையை வழங்க வேண்டும் என நான் பதிலாக அளித்தேன். ஆனால் அதிமுக விதிகளை இவர்கள் திருத்தியிருக்கிறார்கள். இதை ஏற்க முடியாது என பதில் மனுவை அளித்தேன். ஈபிஎஸ் , ஓபிஎஸ் இருவரும் சசிகலாவுக்கும் மோடிக்கும் அடிமையாக இருப்பது போல் எல்லாரும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நான் தன்மானத்துடன் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டேன். எனது வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் எனக்கு ஆதரவான தீர்ப்பை கொடுத்தது. இதை எதிர்த்து ஈபிஎஸ்- ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்கள். அங்கும் எனக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. சசிகலா தினகரனால் தொடரப்பட்ட இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் எங்களால் உங்கள் வழக்கில் முடிவெடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் சொன்னது. அப்போது ஈபிஎஸ் ஓபிஎஸ்- சசிகலா தினகரன் தொடர்ந்த இரட்டை இலை சின்ன வழக்கின் போது நீதிபதி, "இரட்டை இலை சின்னத்தை கொடுத்ததெல்லாம் சரி, ஆனால் அதிமுக விதிகளை திருத்தியது, பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது , ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமையை பறித்தது, தொணடர்கள் மூலம்தான் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை நீங்கள் மாற்றியதை ஏற்க முடியாது என சொன்னார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என்னுடைய மனு விசாரணைக்கு வந்தது. தேர்தல் காலகட்டத்தில் கட்சிக்கு ஒரு தொய்வு வரக் கூடாது என விரும்பினேன். தேர்தல் என்பது தனி, உள்கட்சி பிரச்சினை என்பது தனி. கட்சியை பலவீனப்படுத்துவது எனது நோக்கம் இல்லை. கட்சியில் தொண்டர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. எனது மனு செப்டம்பர் 30-ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை வைத்து பொதுச் செயலாளர் என்பவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன். தொண்டர்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுக்கும் உரிமையை நான் தொடர்வேன்.
கே: உங்கள் மகனின் திருமணத்திற்கு ஸ்டாலினை அழைத்தீர்கள். திமுகவில் இணைய உங்களை எது தடுக்கிறது?
ப: டெல்லியில் நான் நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பாஜகவில் இணைவதாக தெரிவித்தார்கள். எனது மகனின் திருமணத்திற்கு ஸ்டாலின், எல் முருகன், சீமான், திருமாவளவன், ஈஸ்வரன், பாரி வேந்தர் உள்ளிட்டோரை அழைத்தேன். அது போல் ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸை அழைக்க நேரம் கேட்டேன். அவர்கள் கொடுக்கவில்லை. திருமணத்திற்கு அழைத்த அனைவரும் வந்திருந்தார்கள். ஸ்டாலினும் வந்தார், அந்த இடத்தில் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடித்தார் என்றார் கேசி பழனிசாமி.












Click it and Unblock the Notifications