கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. உயரும் கபினி அணை நீர்மட்டம்.. மேட்டூரில் தண்ணீர் குறையுதே
சென்னை: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து 10781 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்காத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 145 கனஅடியாக குறைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 8ஆம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும் ஜூலை 1ஆம் தேதி வரைக்குமே கேரளா, கர்நாடகாவில் தீவிரமடையவில்லை. கர்நாடகா மாநிலம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை சந்தித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது. 11 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவான அளவே பருவமழை பெய்தது. ஜூன் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய அளவை விட மிக குறைவாகவே மழை பெய்த காரணத்தால் அங்குள்ள அணைகளின் நீர் மட்டம் குறையத்தொடங்கியது.

தமிழகத்தின் பங்கான காவிரி நீரை திறந்து விடக்கோரி தமிழக அரசு வலியுறுத்தியது. மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் குறுவை சாகுபடி தப்புமா என்று விவசாயிகள் கவலை அடைந்தனர். அதே நேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் மைசூரு, மாண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு வருணபகவான் மனது வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கர்நாடகா மாநில விவசாயிகள் இயற்கையிடம் வேண்டுதல் வைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் தொடரும் மழையால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் காவிரி, கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2283.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 780 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கபினி அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் ஒகேனக்கல் காவிரி ஆறும் நீர்வீழ்ச்சியும் வறண்டு காணப்படுகின்றன.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 145 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. டெல்டா பாசனத்திற்கான மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக சரிந்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். தமிழ்நாட்டிற்கு காவிரி கால் வைக்கும் நாளை டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications