வெறும் 5 போலீஸ்.. 1000 வன்னியர்கள் திரண்டால் சூர்யாவை காப்பாற்ற முடியாது.. காடுவெட்டி குரு மகன் பகீர்
வெறும் 5 போலீஸ்.. 1000 வன்னியர்கள் திரண்டால் சூர்யாவை காப்பாற்ற முடியாது.. காடுவெட்டி குரு மகன்
சென்னை: வெறும் 5 துப்பாக்கி ஏந்திய போலீஸார் நடிகர் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது என காடுவெட்டி குருவின் மகன் கனலரசு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின சமூகத்தினர் மீது எவ்வாறு பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது குறித்து நிஜமாகவே 1993 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் காட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வன்னியர் சமூகத்தினரை மோசமாக சித்தரித்துள்ளதாக வன்னியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டும் மன்னிப்பு கேட்க கோரியும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

ஜெய்பீம்
இந்த நிலையில் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு எந்த வித அங்கீகாரத்தையோ பாராட்டுகளையோ விருதையோ வழங்கக் கூடாது என வன்னியர் சங்கம் சார்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கு கடிதமும் எழுதியுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை படத்தில் தவறாக காட்டி அதன் மூலம் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் சூர்யாவுக்கு அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் அவரது வீட்டிற்கும் அவரது அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசு சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.

கனலரசு பேட்டி
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜெய்பீம் பட விவகாரத்தை வன்னிய சமூக மக்கள், மிக பொறுமையாக அமைதியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள். சூர்யாவின் வீட்டிற்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவலுக்கு நிற்கிறார்கள். 1000 வன்னியர்கள் சென்றால் அந்த போலீஸாரால் என்ன செய்ய முடியும். போலீஸாரால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது.

காலண்டர் எதற்கு
இயக்குநர் ஞானவேலையும் காப்பாற்றிவிட முடியாது. ஜெய்பீம் படத்தில் அந்த காட்சியில் காலண்டர் வைப்பதற்கான அவசியமே இல்லை. வன்னிய சமூக மக்களை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் நடிகர் சூர்யா எந்த படத்திலும் நடிக்க முடியாது. எந்த படமும் எடுக்க முடியாது. இயக்குநர் ஞானவேலும் தனது வீட்டை விட்டு வெளியே வர முடியாது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications