திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்! அமைச்சர் நேருவின் ரைட்ஹேண்ட் காஜாமலை விஜய் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவிப்பு
சென்னை: திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அந்த 4பேரில் காஜாமலை விஜய் தலைமை செயற்குழு உறுப்பினர், அமைச்சர் நேருவின் வலது கரம் ஆவார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55 ஆவது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்த வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது.

திருச்சி சிவா
இதனால் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் திருச்சி சிவாவை விழாவுக்கு அழைக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அமைச்சர் நேருவின் காரை மறித்து கருப்பு கொடியை காட்டி நேருவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் பகுதி வழியாக சென்ற அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் கற்களை கொண்டு சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் திருச்சி சிவாவின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஜன்னல் கண்ணாடியும் உடைந்தது.

பிளாஸ்டிக் நாற்காலி
இதையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளையும் உடைத்தனர். இந்த நிலையில் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சம்பவத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அது போல் புகாரின் பேரில் திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி நீதிமன்ற காவல் நிலையம்
இந்த நிலையில் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்திற்கு வந்த அமைச்சர நேரு ஆதரவாளர்களுக்கும் சிவா ஆதரவாளர்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நாற்காலிகளை வீசி தாக்கினர். இதில் பெண் போலீஸ் சாந்தி என்பவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் திமுக பகுதி செயலாளர் திருப்பதி கைது செய்யப்பட்டார்.

4 பேர் மீது நடவடிக்கை
இந்த நிலையில்தான் மேற்கண்ட 4 பேரை திமுக தலைமை கழகம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. இந்த 4 பேரில் காஜாமலை விஜய் என்பவர் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். செயற்குழு உறுப்பினர் பதவி என்பது மிக முக்கியமானது. அது மட்டுமல்லாமல் அவர் நேருவின் வலதுகரமாகவும் நிழலாகவும் இருந்தவர். அது போல் மாவட்ட பொருளாளர் துரைராஜ் என்பவரும் அமைச்சர் நேருவுடன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் அளவுக்கு நெருக்கமானவர்.

அமைச்சர் நேரு
அது போல் மற்ற இருவரும் கூட அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள்தான். திமுகவில் நேரு முதன்மை செயலாளராக இருந்து வருகிறார். அப்படியிருந்தும் தனது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை அவரால் தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு கையை மீறி போய்விட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே திமுக நிர்வாகிகளை ரவுடிகள் என விமர்சித்து வருகிறார்கள். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் திமுகவினர் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க அறிக்கை விட்டிருந்தார். இவை எல்லாவற்றையும் விட திமுக தலைமையின் இந்த நடவடிக்கையானது மற்ற அமைச்சர்கள் மற்றும் மூத்த முக்கிய நிர்வாகிகளுக்கு பாடம் கற்பித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. தவறு இழைத்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரும் நேருவின் ஆதரவாளர்கள், அது போல் கைதான திருப்பதியும் நேருவின் ஆதரவாளர். அமைச்சரின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டிய திருச்சி எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications