கலைஞர் மகளிர் உரிமை தொகை வருது.. தென்மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 + 6,000 நிவாரணத்தொகை.. அரசாணை வந்தது
சென்னை: மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை புயல் புரட்டிபோட்டுவிட்ட சென்ற நிலையில், நிவாரண தொகையை அரசு அறிவித்து வழங்கியது..

அடுத்த சில தினங்களிலேயே தென் மாவட்டங்களில் இயற்கை சீற்றம் திசை திரும்பியது.. வரலாறு காணாத மழை வெள்ளத்தில் தென்மண்டலமே சூழ்ந்துவிட்டது. பலரும் வீடின்றி தவித்தனர்.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம்: தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.. இதில், நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இயல்பை விட 68 சதவீதமும், நெல்லை 135 சதவீதமும், குமரியில் 103 சதவீதமும், தென்காசியில் 80 சதவீதமும் மழைப்பொழிவு பதிவாகியது..
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்..
அந்தவகையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கும் ரூ. 6000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது..
உதவித்தொகை: அதாவது, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 6,63,790 குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணத்தொகையும், கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட 14,31,164 குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.. இந்நிலையில், இந்த நிவாரணத் தொகைக்காண அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது..
ஆலோசனை கூட்டம்: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் . மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத்தொகை: இது ஒருபுறமிருக்க பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்படுவதால், வழக்கமாக வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்குமா? என்ற சந்தேகம் பரவலாக கிளம்பியது.. ஆனால், வேறு எந்த திட்டத்திற்காகவும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தாமதப்படுத்தப்படாது என்றும், இந்த திட்டத்திற்கான தொகை அரசால் தனியாக ஒதுக்கப்பட்டுவிட்டதால், இது தொடர்பான வீண் குழப்பம் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகை சற்று முன்கூட்டியே வழங்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவது கூடுதல் மகிழ்ச்சியை பெண்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications