1000 இல்லை.. 5 பைசா கூட கிடைக்காது! மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க போறீங்களா? இதை மறக்காதீங்க!
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது சில ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணும் முக்கியம். இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.
கடந்த 29ஆம் தேதி முதல் நேரடியாகவும் ஆன்லைனிலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், திருமணமானவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என இலட்சக்கணக்கானோர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் அதாவது ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது சில ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

தகுதிகள்:
1. வயது: விண்ணப்பதாரர் 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
2. குடும்பத் தலைவர்: ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியாக பெயர் உள்ள பெண் அல்லது குடும்பத் தலைவரின் மனைவி.
3. வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
4. வருமான வரி: குடும்ப உறுப்பினர்கள் யாரும் வருமான வரி தாக்கல் செய்திருக்கக்கூடாது.
5. வாகனங்கள்: குடும்பத்தில் நான்கு சக்கர வாகனங்கள் (கார், ஜீப், டிராக்டர்) இல்லாதிருக்க வேண்டும்.
6. நிலம்: குடும்பம் 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலத்திற்கும் குறைவாக நிலம் வைத்திருக்க வேண்டும்.
7. மின்சாரம் பயன்பாடு: வீட்டில் ஆண்டு மின்சாரம் பயன்பாடு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
8. அரசு ஊழியர்கள்: மத்திய/மாநில அரசு, பொதுத்துறை, வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்கள் மற்றும் அவர்களின் ஓய்வூதியதாரர்கள் தகுதியற்றவர்கள்.
9. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் (விதவை, முதியோர், மாற்றுத்திறனாளி) தகுதியற்றவர்கள்.
10. விண்ணப்பதாரர்: ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
11. திருமண நிலை: திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் ஆகியோரும் தகுதி வாய்ந்தவர்கள்.
தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் கார்டு - விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு
2. ரேஷன் கார்டு - குடும்ப அட்டை
3. பிறந்த தேதி ஆதாரம் - SSLC மதிப்பெண் பட்டியல் / வாக்காளர் அடையாள அட்டை / பிறந்த சான்றிதழ்
4. வங்கி கணக்கு விவரம் - விண்ணப்பதாரரின் பெயரில் வங்கி கணக்கு (பாஸ்புக் முதல் பக்கம்)
5. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - தற்போதைய புகைப்படம்
6. செயல்பாட்டிலுள்ள மொபைல் எண் - தொடர்பு கொள்ளும் எண்ணாகும்
7. இறப்புச் சான்றிதழ் - கைம்பெண்களுக்கு (கணவர் இறந்திருந்தால்)
8. மாற்றுத்திறனாளி/திருநங்கை சான்றிதழ் - தேவைப்பட்டால்
9. மின் கட்டண ரசீது - ஆண்டு மின்சாரம் பயன்பாடு நிரூபிக்க (தேவைப்பட்டால்)
10. நிலம் பற்றிய ஆதாரம் - நில அளவு குறைவாகவே உள்ளது என்பதை நிரூபிக்க (தேவைப்பட்டால்) கொடுக்க வேண்டும்.
மேற்கண்ட ஆவணங்களை மறக்காமல் சமர்பித்தால், தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications