இளைஞர்களைக் கட்டிப்போட்ட கலைஞர் புகைப்படக் கண்காட்சி
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு இது நூற்றாண்டு. ஆகவே மாநிலக் கல்லூரியில் அவரைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.
இக்கண்காட்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவரது 14 வயதில், தனது சக மாணவர்களைத் திரட்டி இந்தி எதிர்ப்புக்குப் போராடியது முதல், இறுதியாக மெரினாவில் அவரை அடக்கம் செய்வதற்காக இடம் கேட்டுப் போராடியது வரையான அனைத்து வரலாற்றுச் சம்பவங்களையும் புகைப்படங்களாகத் தொகுத்து வைத்துள்ளனர்.

அவர் ஒரு மாணவனாக இந்த நாட்டு நலனுக்காகப் போராடியது தொடங்கி, பின்னர் முதலமைச்சராக வந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது வரையான வரலாற்றை ஒரு மிக எளிதாக இந்தப் படங்களை வைத்துப் புரிந்துகொள்ள முடியும்.

பக்கம் பக்கமாகப் படித்து அறிந்துகொள்வதைக் காட்டிலும் காட்சி வடிவில் அதை உணர்ந்துகொள்வது மிகமிக எளிது. அந்தத் தேவையை இந்தக் கண்காட்சி மிகச் சிறப்பாக நிறைவேற்றித் தந்துள்ளது.

இங்கே வந்திருந்த மாணவர்களில் ஒருவர், தான் இதுவரை மு.கருணாநிதியைத் தாடி இல்லாமலே பார்த்திருப்பதாகவும், முதல்முறையாகத் தாடியுடன் அவரை படத்தில் பார்ப்பது புதிய அனுபவமாக தனக்கு இருந்து என்றும் தெரிவித்தார்.

அதைப்போன்று இக்கண்காட்சிக்கு வந்திருந்த அனைத்து மாணவர்களும் 2கே கிட்ஸ். ஆகவே, மு.கருணாநிதியின் நூறாண்டு சரித்திரம் பற்றி தங்களுக்கு அதிகம் தெரியாது என்றும், அவரது இத்தனை படங்களை ஒருசேரப் பார்க்கும்போது அவர் மிகச் சிறந்த தலைவர் எனப் புரிகிறது என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

"இவர் மக்களைத்தான் தெய்வமாகப் பார்த்திருக்கிறார். அவர்களுக்குச் செய்கின்ற தொண்டுதான் இவரது வாழ்க்கைப் பணியாக இருந்திருக்கிறது. இவருக்கு முன்பாக தலைவர்கள் செய்தவற்றை தாங்களே செய்ததைப் போலப் பேசி வந்திருக்கிறார்கள்.

ஆனால், மு.கருணாநிதி அப்படி இல்லை. அவர் தான் கொண்டுவந்த திட்டங்களைக் கூட, தனக்கு முன்பே இருந்தவர்கள் சொன்னதால்தான் தான் செய்ததாகச் சொல்லி இருக்கிறார். இது அவரது தனித்துவம்" என்கிறார் ஒரு மாநிலக் கல்லூரி மாணவி.

ஒரு மாணவி மு.கருணாநிதியைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'அவர் சிறுவயதில் பள்ளியில் இடம் கேட்டுப் போராடி இருக்கிறார். அதை மாதிரி இறுதிக் காலத்தில் மெரினாவில் இடம் கேட்டுப் போராடி இருக்கிறார். அவருக்கு எந்த விசயமும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அதைத்தான் இந்தக் கண்காட்சி எனக்கு உணர்த்தியுள்ளது' என்கிறார்.

கோகுல் என்ற மாணவர் பேசுகையில், "ஒரு மனிதன் படைத்த முழு சகாப்தம் இங்கே புகைப்படமாக வைத்துள்ளனர். அதை அனைவரும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

ஆய்வு மாணவர் மோகன வசந்தன், "இன்றைய மாணவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்ததுகூட தெரியாது. ஆகவே சமூகநீதிக்காக இவர் என்ன செய்திருக்கிறார்கள்? இன்றைக்கு உள்ள சமூக கட்டமைப்புக்காக இவர் என்ன செய்திருக்கிறார்? என்பதைப் பற்றி எல்லாம் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தக் கண்காட்சி" என்கிறார்.

செல்வராஜ் என்ற மாணவர், தான் இதுவரை அவரை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்ததாகவும், இந்தக் கண்காட்சியைப் பார்த்தபிறகுதான் அவர் இத்தனைப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் என்பதே தனக்குத் தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்ததாக மாணவி ஆர்த்தி, 'கலைஞர் இவ்வளவு போராடி பிறகுதான் இந்தளவுக்கு உயரத்திற்கு வந்திருக்கிறார். அவர் மக்களோடு மக்களாக நின்று பல்வேறு விசயங்களுக்காகப் போராடி இருக்கிறார். இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகுதான் அவர் இவ்வளவுத் திட்டங்களைத் தந்துள்ளார் என்பதை இந்தக் கண்காட்சியைப் பார்த்துத்தான் அறிந்துகொண்டோம்.

இவர் எழுதுவார் எனத் தெரியும். ஆனால், இவர் கவிதைகள் எல்லாம் எழுதுவார் என்பது எனக்குத் தெரியாது. அவர் ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர் என்பதை இங்கு வந்த பிறகே அறிந்துகொண்டோம்' என்கிறார்.

"எங்களைப் போன்ற ஏழை எளிய பெண்களுக்கு அவர் பல உதவிகளைச் செய்திருக்கிறார் என்பதை இங்கே வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். இத்தனை நாள்கள் எனக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது. இங்குள்ள ஒவ்வொரு படத்தில் உள்ள விளக்கக் குறிப்புகளைப் படிக்கும் போது வியப்பாக இருக்கிறது" என்கிறார் நீலாவதி.

கண்காட்சி குறித்து மாநிலக் கல்லூரியின் முதல்வர் ராமன், "கலைஞர் என்பவர் தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டின் மாபெரும் அடையாளம். அந்தச் செய்தியை இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுகின்ற யாரும் உணர்வார்கள். இந்தக் கண்காட்சி அக்டோபர் 31 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இதனை எங்கள் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது. அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன்" என்கிறார்.

சென்னையில் நடைபெற்றுவரும் கண்காட்சியைப் போலவே இதழாளர் - கலைஞர் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி கோவை வ.உ.சி மைதானத்திலும் நடைபெறுகிறது. தனது பொது வாழ்க்கையை மாணவர் நேசனில் தொடங்கி, முரசொலி வரை இதழியலாளராக அவர் ஆற்றிய பணிகள் இங்கே படங்களாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஆகவே, அனைவரும் வருகை தந்து அவரது பங்களிப்பை அறிந்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் திமுக ஐடி விங் இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன்.

















Click it and Unblock the Notifications