நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கலைமாமணி விருது.. கலாச்சாரத்துறைக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி, கலைமாமணி விருதுகள் அறிவிப்பது தொடர்பாக முடிவு செய்துள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சுற்றுலா, கலாச்சாரத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மன்றத்தில் காலியாக இருந்த 11 பொதுக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடத்தக் கோரி பொதுக்குழு முன்னாள் உறுப்பினரான வழுவூர் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு தேர்தல் நடத்தும் நடைமுறையை மாற்றி, நியமன நடைமுறையை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 22 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிமன்ற அனுமதியின்றி கொள்கை முடிவுகள் எடுக்க கூடாது என, 22 உறுப்பினர்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், தற்போது கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் எனவும் கூறி, வழுவூர் ரவி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை செயலாளர் அபூர்வ வர்மா, கலை மற்றும் கலாச்சார இயக்குனரக ஆணையர் கவிதா ராமு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் தங்கவேலு ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.