கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: 250 பக்க சார்ஜ் ஷீட் தாக்கல்
சென்னை: கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ளது கலாஷேத்ரா நடன கல்லூரி. கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கல்லூரி படிப்பு போல் இளநிலை, முதுநிலை பட்டமாக ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 4 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா மாணவிகள் புகார் கூறியிருந்தனர்.

இந்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதது. மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது.
இதையடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கைது செய்தனர். பாலியல் புகார் தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீசார் நேரடியாக விசராணை நடத்தினர். இந்த நிலையில் தான் 250 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் இன்று சென்னை சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பேராசிரியர் ஹரிபத்மன் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.












Click it and Unblock the Notifications