எங்களுக்கு நீதி வேண்டும்..பாலியல் குற்றச்சாட்டு..கலாஷேத்ரா மாணவிகள் ஆவேசத்துடன் போராட்டம்
சென்னை: எங்களுக்கு நீதி வேண்டும். நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறி கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர் சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள். பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா நிறுவனத்தில் உலகின் பல இடங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் வந்து தங்கிக் கலை பயின்று வருகின்றனர். பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமையும் இந்த நிறுவனத்தையே சேரும். இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் மீது ஏராளமான மாணவிகளுக்கு அந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக பரப்பப்பட்டது.
இது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்ற தேசிய மகளிர் ஆணையம் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து புகார் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதே நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவரின் பெயரில் சமூக வலைதளத்தில் தகவல் பகிரப்பட்டதால் சம்பந்தப்பட்ட மாணவி அதுபோல எந்த விதமான பாலியல் தொந்தரவும் கொடுக்கப்படவில்லை ஆசிரியர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவியின் புகாரை பெற்று அது குறித்தும் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநரும், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான லீலா சேம்சன், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கலாஷேத்ராவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த ஒரு பதிவை எழுதி, உடனே அதை நீக்கினார்.
அந்தப் பதிவில், கலாஷேத்ராவில் கடந்த பத்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 18 வயது நிரம்பாத குழந்தைகளும் அடக்கம் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கலாஷேத்ராவின் நிர்வாகிகள் அவசர அவசரமாக ஒரு விசாரணையை மேற்கொண்டு, அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று கூறி விசாரணையை முடித்துவிட்டனர்.

இப்போது சுமார் மூன்று மாதங்கள் கழித்து, நூறு மாணவிகளின் புகார்களுடன் தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து தமிழ்நாடு டிஜிபிக்கு இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் மீண்டும் பரவ காரணமே பாலியல் குற்றம் சாட்டப்பட்ட அதே ஆசிரியருக்கு, கடந்த மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மரியாதை செலுத்தியதுதான் காரணம் என்கின்றனர் மாணவிகள். அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை ரகசியமாகப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக சமூக வலைதளத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த இந்தப் பிரச்னை, 'கேர்ஸ்பேசஸ்' எனும் அமைப்பின் பார்வைக்கு வந்தது. கலாஷேத்ரா மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு பாதுகாப்பான தளத்தை கேர்ஸ்பேஸ் அமைப்பு உருவாக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்பதால், கலாஷேத்ராவில் படிக்கும் மாணவர்கள் உட்பட ஏற்கெனவே படித்து முடித்த முன்னாள் மாணவர்களும், தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான தாக்குதல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து சுமார் நூறு மாணவர்களின் அறிக்கை, 641 பேரின் கையெழுத்துடன், இப்பிரச்னை தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதிகாரப் பதவியிலிருக்கும் அந்த ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே நிர்வாகம் விசாரணையை மேற்கொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மத்தியில், தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக சீனியர் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்து, கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் திடீரென தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரை திரும்பப்பெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி தன் பெயரில் பொய்யான புகார் சமூக வலைதளத்தில் பரவுவதாக தெரிவித்த காரணத்தினால் தமிழக போலீஸார் விசாரிக்கும் படி கூறியதை வாபஸ் பெற்றதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்று மூன்று மணி்நேரம் ரகசியமாக விசாரணை நடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அடையாறு கலாஷேத்ராவில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தொடர்புடைய மாநிலத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, உறுப்பினர் குஷ்புவை உடன் அழைத்துச் செல்லாமல் ரகசியமாக விசாரணை நடத்தியது சர்ச்சைக்குள்ளானது. விசாரணைக்காக நியமிக்க நால்வர் குழுவின் அறிக்கையும் பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என்று கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகவே மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களுக்கு நீதி வேண்டும்.. நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் கூறி கையில் பதாகைகளுடன் மாணவிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications