பாலியல் புகாரில் சிக்கியவர்களை கலாஷேத்ராவிற்குள் விடாதீங்க..உத்தரவிட்ட மாநில மகளிர் ஆணைய தலைவி
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய மற்ற 3 பேராசிரியர்களை கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது என அறிவுத்தியுள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறியுள்ளார். தேர்வு நேரம் என்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் குமாரி தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்த நிலையில், கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி, துணை இயக்குனர்களிடம் மாநில மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினர்.

கலாஷேத்ரா இயக்குனரிடம் விசாரணை நிறைவுபெற்ற பின் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கலாஷேத்ராவில் பாலியல் புகார் தொடர்பாக 4 பேராசிரியர்களில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கிய மற்ற 3 பேராசிரியர்களை கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது என அறிவுத்தியுள்ளோம். தேர்வு நேரம் என்பதால் மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் என்னென்ன புகார்கள் வந்துள்ளது என்ற விவரத்தை கலாஷேத்ரா இயக்குனரிடம் கேட்டுள்ளோம்.

குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் இதுவரை புகார்கள் வரவில்லை என கலாஷேத்ரா இயக்குனர் கூறியுள்ளார். கலாஷேத்ராவில் பாலியல் புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் 3 புகார்கள் வந்துள்ளன. கலாஷேத்ராவில் குறைதீர் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி மற்றும் துணை இயக்குனர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். கலாஷேத்ரா மாணவிகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். புகாருக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி அளித்துள்ளார். கலாஷேத்ரா இயக்குனர் உரிய ஆவணங்களை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
இதனிடையே விடுமுறை அறிவிக்கப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி வரும் 5ஆம் தேதி திறக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications