நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்.. சோசியல் மீடியாவில் கதறி அழுது பிரியாவிடை தந்த சீமான் தம்பிகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காளியம்மாளின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவரது சமூக வலைதளப் பக்கங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி தம்பிகள், விமர்சிக்காமல் பாசத்துடனும் வருத்தத்துடனும் பிரியாவிடை தந்து பதிவிட்டு வருவது கவனம் பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் அறியப்பட்ட பெண் தலைவர்களில் முதன்மையானவர் காளியம்மாள். ஆனால் கடந்த சில மாதங்களாக சீமானால் ஓரம்கட்டப்பட்டிருந்தார் காளியம்மாள். அவரை பிசிறு என சீமான் விமர்சித்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தடா சந்திரசேகரன் மறைவைத் தொடர்ந்து அந்த பதவியை தமக்கு தர வேண்டும் என காளியம்மாள் எதிர்பார்த்தாராம். ஆனால் சீமான், மனைவி கயல்விழியை நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளராக்க விரும்பினாராம். இதனால் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்துதான் தனிப்பட்ட உரையாடல்களிலும் பொதுவெளியிலும் காளியம்மாளை விமர்சித்தார் சீமான் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளியம்மாள் விலகல் குறித்து அதிகம் பேசப்பட்டது. சீமானும் காளியம்மாள் போனால் போகட்டும்.. கவலை இல்லை என கூறியிருந்தார். இதனையடுத்தே காளியம்மாள் இன்று தாம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமது சமூக வலைதளப் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் அறிவிப்பை காளியம்மாள் வெளியிட்டிருந்தார். பொதுவாக இது போல நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் பிரமுகர்களை சீமானின் தம்பிகள் மிக கடுமையான சொற்களால் வசைபாடுவதுதான் வழக்கம். ஆனால் காளியம்மாளின் வெளியேறுதல் அறிவிப்பு சீமானின் தம்பிகளை கடுமையாக பாதித்திருக்கிறது; அதனால் சீமானின் தம்பிகள் பெரும்பாலானோர் மரியாதையாகவும், வருத்தமாகவும் பதிவிட்டு பதிலளித்துள்ளனர்.
@pearlkumar0084 என்ற நாம் தமிழர் கட்சி தொண்டர், உங்களை இழந்து வாடும் நாம்தமிழர் தொண்டனில் நானும் ஒருவன். எங்கிருந்தாலும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மட்டும் பேசி நின்னுவிடாதீர்கள். மற்றபடி உங்களுக்கு வாழ்த்துக்கள். திராவிட கட்சியோடும் சென்று உங்கள் மதிப்பையும் குறைத்துவிடாதீர்கள் என எழுதி இருக்கிறார்.
@Muthu_Sakthive (நாம் தமிழர் கட்சி முன்னாள் துணை தலைவர் குளித்தலை சட்டமன்றத் தொகுதி கரூர் மாவட்டம்) தமது பதிவில், நடக்க கூடாது என்று நினைத்தேன்... நம் தமிழ் தேசிய தலைவரையும் நம் அண்ணனையும் மறந்து விடாதீர்கள்... வாழ்த்துகள் சொல்ல மனம் வரவில்லை சகோதரி என பதிவிட்டுள்ளார்.,
@balajie3 என்ற நாம் தமிழர் கட்சி தொண்டர், வருத்தங்கள் அக்கா. ஆனால் உங்கள் முடிவை ஏற்று கொள்கிறேன். நாங்கள் அண்ணன் சீமான் முழுமையாக நம்புகிறோம். தோல்வியோ வெற்றியோ இறுதி வரை தமிழ் தேசிய களத்தில் நாம் தமிழரில் தான் என்னுடைய பயணம் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications