குவைத் அடுக்குமாடி தீ விபத்து.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கமல் உருக்கமான வேண்டுகோள்
சென்னை: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்தியர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக அதிக அளவில் உள்ள நாடுகளில் ஒன்று குவைத். சுமார் 21 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் குவைத்தில் இருக்கிறார்கள். எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்.

குவைத்தில் என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஆறு மாடிகளை கொண்ட ரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். தொழிலாளர் முகாம் என அழைக்கப்படும் அந்த அடுக்குமாடியில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு இறந்துள்ளனர். உடல் கருகியும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு சுமார் 49 பேர் இதுவரை இறந்துள்ளனர். இறந்தவர்களில பலர் இந்தியர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை குவைத் அரசு வெளியிட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மற்றவர்களின் நிலையை அறிய தமிழக அரசு தொலைப்பேசி எண் அறிவித்துள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications