வாங்கய்யா வாங்க.. ஓட்டு போட்ருவீங்கல்ல?.. கமலின் கையில் முத்தமிட்டு பதில் அளித்த மூதாட்டி
சென்னை: சென்னை மந்தைவெளி ரயில் நிலையம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
Recommended Video
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 22 ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்து போட்டி
இந்த முறை திமுகவை தவிர மற்ற கட்சிகள் தனித்து போட்டியிடுகிறார்கள். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல்களில் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்ற மக்கள் நீதி மய்யம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது.

தேர்தல் பிரச்சாரம்
இந்த நிலையில் இன்று முதல் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார். மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகில் உள்ள விசாலாட்சி தோட்டம் குடிசைப் பகுதியில் (123 ஆவது வார்டு) இன்று அவர் பிரச்சாரம் செய்தார். காலை 11.30 மணிக்கு தனது காரில் வந்து இறங்கிய கமல், குடிசை பகுதிகளுக்குள் நடந்தே சென்றார்.

கமலை சூழ்ந்த மக்கள்
அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கமல்ஹாசனை பார்த்ததும் அவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல், மறக்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மூதாட்டி கொடுத்த முத்தம்
அங்கு வீட்டு வாசலில் ஒரு மூதாட்டி நின்றிருந்தார். அவரை பார்த்ததும் அவரிடம் வாக்கு சேகரிக்க கமல் சென்றார். அப்போது அந்த மூதாட்டி, வாங்கய்யா வாங்க என்றார். உடனே கமல் அருகில் சென்று மறக்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவீர்களா என கேட்டார். அதற்கு அந்த பாட்டி சரி என கூறிவிட்டு அவரது கையில் முத்தமிட்டார்.












Click it and Unblock the Notifications