பெரும் எதிர்பார்ப்பில் தேர்தலின் "கதாநாயகன்".. விஸ்வரூப ஹீரோவின் வாக்குறுதிகள் என்ன?..
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று வெளியாகவுள்ள தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை பெரிதும் கவர்கிறது என்றால் அது தேர்தல் அறிக்கைதான். கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிகவும் வைரலானது. இலவச கலர் டிவி, குறைந்த விலையில் ரேஷன் அரிசி உள்ளிட்ட திட்டங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்த தேர்தலில் திமுக வென்றது. அது போல் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கைதான் உண்மையில் கதாநாயகன் என்பதை உணர்ந்த ஜெயலலிதா தனது ஆட்டத்தை அதில் ஆரம்பித்தார்.

இலவச மிக்ஸி
20 கிலோ இலவச அரிசி, இலவச மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் உள்ளிட்ட இலவசங்களை அள்ளி தெளித்தார். பின்னர் அமோகமாக வென்றது அதிமுக. அதிலிருந்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பதில் ஜெயலலிதா அதிக கவனத்தை செலுத்தினார். தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கும் தேர்தல் அறிக்கையை இன்று மக்கள் நீதி மய்யம் வெளியிடுகிறது.

அதிக கவனம்
பொதுவாக நீட் தேர்வு, மதுபானக் கடைகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான தாக்குதல், வாக்குக்கு பணம் கொடுப்பது, பெட்ரோல் டீசல் விலையுயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் மீதான சுமை, மக்களுக்கான இன்னல்களை கண்டித்து கமல்ஹாசன் குரல் கொடுத்து வருகிறார்.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என அறிவித்த திட்டத்தை திமுக காப்பியடித்துவிட்டதாக கமல் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய தேர்தல் அறிக்கை அதிக கவனம் பெறுகிறது.

கமல்ஹாசன் முடிவு
இந்த தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளுக்கு கமல்ஹாசன் ஒரு முடிவு கட்டுவார் என்றே தெரிகிறது. அது போல் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்த்து போராடுவது குறித்து இடம்பெற்றிருக்கும். எழுவர் விடுதலை குறித்து ஏதாவது இடம்பெற வாய்ப்பிருக்கலாம். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு தனித் துறை உருவாக்குவது, சுற்றுச்சூழல் பாதிப்பு, வடசென்னைக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறப்படும் சாலை திட்டங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை எதிர்ப்பது குறித்து இருக்கலாம்.

அலைக்கழிப்பு
மேலும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள், பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகள், தனது கட்சியின் செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்கியது போல் அரசு செயல்களை பொதுமக்கள் எந்த பணிகள் அலைக்கழிக்கப்படுகிறார்களோ அவையெல்லாம் டிஜிட்டல்மயமாக்க வாய்ப்புகள் உள்ளன.

தேர்தல் அறிக்கை
பெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு தீர்வு காணும் முயற்சி, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி குறித்த திட்டங்கள் அறிவிக்கப்படலாம். லஞ்ச லாவண்யமற்ற ஆட்சியை நடத்துவது, ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில வழிவகை செய்யும் திட்டம், மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு தொகுதிகளில் மக்களின் கோரிக்கைகளை பெற்ற நிலையில் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவை கமலின் தேர்தல் அறிக்கையில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அனைத்து தரப்பினருக்குமான நல்ல திட்டங்களை அவர் அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications