கைதேர்ந்த அரசியல்வாதியாக மாறும் கமல்ஹாசன்.. மற்ற அரசியல்வாதிகள் செய்யும் தவறை செய்யாத "ஆண்டவர்"
Recommended Video

சென்னை: தேர்தல் கூட்டணி பேரங்களின் போது மற்ற அரசியல்வாதிகள் செய்யும் தவறை கமல்ஹாசன் செய்யாமல் உள்ளது அவரது ரசிகர்களையும் கட்சி நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அரசியல்வாதிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாகும். அரசியலில் எதுவும் நிலையில்லை. இன்று சண்டையிட்டு கொள்பவர்கள் நாளை பங்காளி.. இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை சத்ரு.
ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது திட்டங்களை உயர்த்தி பேசுவதும் எதிர்க்கட்சியினர் அவர்களை தரம்தாழ்ந்து பேசுவதும் வாடிக்கைதான். அது போல் ஆட்சி மாற்றத்தின் போது கொண்டு வரப்படும் திட்டங்களை ஏற்கெனவே ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதிர்ப்பதும் நடைமுறைதான்.

கூட்டணி
பின்னர் தேர்தல் என வந்துவிட்டால் தாங்கள் பேசியதையும் ஏசியதையும் மறந்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும் அரசியலில் சர்வ சாதாரணம். அந்த வகையில் கூட்டணி குறித்து கமுக்கமாக வேலைகளை முடித்த அதிமுக, பாஜகவுடன் கூட்டணி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள்
அதிமுக, பாஜகவை விமர்சனம் செய்த பாமகவும் தேமுதிகவும் அந்த கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், மீனவர்கள், ஸ்டெர்லைட், காவிரி, முல்லை பெரியாறு, மேகேதாது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சித்துள்ளது என்பது மக்கள், எதிர்க்கட்சிகளின் கருத்து.

அப்பட்டம்
ஆனால் அதையெல்லாம் மறந்து மேற்கண்ட கட்சியினர் கூட்டணி வைப்பதால் அவர்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தல் வரும் போது பேசிக்கொள்வதும், தேர்தல் முடிந்த பிறகு எதிர்த்துக் அறிக்கை, டுவீட் விடுவதும் அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இவர்களை நம்பி எப்படி வாக்களிப்பது. நேற்று வரை ஆளும் கட்சியினரை எதிர்த்துவிட்டு இன்று தேர்தலின் போது கைகோர்ப்பது சந்தர்ப்பவாதம் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

கமல்ஹாசன் பேச்சு
அந்த வகையில் மத்திய -மாநில அரசுகளை அவ்வப்போது தாக்கி பேசி வரும் கமல்ஹாசனிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றே அவர் பதில் அளித்து வந்தார். கூட்டணி என்று அவர் வைத்தால் யாருடன் வைக்க வேண்டும். அவர் யாரையெல்லாம் விமர்சனம் செய்தாரே, யாரெல்லாம் நாட்டுக்கு நல்லது செய்யவில்லை என சொன்னாரோ அவர்களுடன்தானே கூட்டணி வைக்க வேண்டும்? இவரும் மற்ற அரசியல்வாதிகளை போல் அரசியலில் நிரந்தர எதிரியும் அல்ல, நிரந்தர நண்பரும் அல்ல என்ற கோட்பாட்டை பாலோ செய்யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என மக்கள் கருதினர்.

மகிழ்ந்த ரசிகர்கள்
இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று ஆங்கில தொலைகாட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தங்கள் கட்சி யாருடனும் போட்டியிடவில்லை, தனித்தே போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மற்ற அரசியல்வாதிகள் செய்யும் சந்தர்ப்பவாத அரசியலை அவர் செய்யவில்லை என்பது ரசிகர்களையும் கட்சி நிர்வாகிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications