நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்லனும்..ஏன்னா நான் தலைவர்! நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்!
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ள நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்ல வேண்டும் எனவும், அனைவரும் என்னை பின்பற்றுங்கள் என அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நிர்வாகிகளிடையே பேசியுள்ளார்.
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவரது அழைப்பை ஏற்று டெல்லியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவர்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டது தேசியளவில் பேசுபொருளாகி உள்ளது.
ராகுல் காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் கமல்ஹாசன் தேசிய அளவில் அரசியல் கவனிக்கப்படும் நபராக மாறியுள்ளார். குறிப்பாக ராகுல்காந்தியுடனான அவரது உரையாடல் உள்ளூர் முதல் டெல்லி வரை கவனம் பெற்றது.

மநீம விருந்து
இந்நிலையில் டெல்லியில் தன்னுடன் தனது அழைப்பை ஏற்று தன்னுடன் யாத்திரையில் பங்கேற்க டெல்லிக்கு வந்த தனது கட்சி நிர்வாகிகளை கவுரவிக்க திட்டமிட்ட கமல் அவர்களுக்கு விருந்து கொடுக்க விரும்பினார். இதனையடுத்து இன்று தனது கட்சியினருக்கு திட்டமிட்டபடி விருந்து அளித்தார். இந்த விருந்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கமல்ஹாசன் அளித்த விருந்தில் சிக்கன், மட்டன், மீன், என அசைவ உணவு வகைகளில் உள்ள அனைத்தும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

பாரத் ஜோடோ யாத்திரை
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர்," டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் என்னோடு கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும்.

ஏ சொன்னால்..
இதனை நிலை நாட்டும் வகையில் தான் ராகுலின் யாத்திரை அமைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா நடத்தும் மத அரசியல் எடுபடாது. மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். தலைமை பொறுப்பில் உள்ள நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்ல வேண்டும். அனைவரும் என்னை பின்பற்றுங்கள். கட்சியினர் அனைவரும் ஒரே வித கருத்தோடு செயல்பட வேண்டும்

சென்னையில் விருந்து
கட்சி தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், தலைவர் கூறும் கருத்தை மட்டுமே நிர்வாகிகள் வெளி இடங்களில் பேச வேண்டும் மாறாக, கட்சி தலைமை கூறுவதற்கு மாறாக செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதிலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கேட்டுள்ளோம்" என பேசினார்.












Click it and Unblock the Notifications