எனக்கு பின் என் மகளோ, மைத்துனரோ.. கமல் பொளேர் பொளேர்.. யாரை சொல்றார் தெரியுமா!
சென்னை: எனக்குப் பின் எனது மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று பேசியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அவர் போகிற போக்கில் விஜயகாந்த்தின் குடும்ப அரசியலை குத்தி விட்டுப் போயுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கும் லடாய் ஆரம்பித்துள்ளது. மாறி மாறி வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இதில் கமல் ஒரு கட்டத்தில் திருவாரூருக்கே சென்று உரையாற்றும்போது, "தமிழகத்துக்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும். அன்றைய தேவை கட்சி உருவாகி ஆட்சி செய்தது. ஆனால் அவை அகற்றப்பட வேண்டியது இந்தக் காலத்தின் தேவை" என்று துணிந்து சொன்னார். வாரிசு அரசியலை உருவாக்கியது இந்த திருவாரூர்தான் என்று நேரடியாகவே மறைந்த தலைவரை நினைவுபடுத்தும்படி பேசினார்.

போலீஸ் துறை
பொதுவாக கமலின் கருத்து, அரசியலில் ஒரு சமதளம் இருக்க வேண்டும் என்பதுதான். தொழில் ரீதியான வாரிசு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை, தவறும் இல்லை. ஆனால் அரசியலில், அப்படி இருக்கக் கூடாது என்பதுதான் கமலின் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் துறையில் வாரிசு முறை அமலுக்கு வந்தால் நிலைமை என்னாவது என்பதுதான் கமலின் கருத்து!

வாரிசுகள்
கமலின் குடும்பத்தை தமிழகம் அறிந்ததுதான். எல்லோரும் பிரபலம்தான், ஒருவேளை கமல் கட்சியில் வாரிசுகள் யாரும் வரவாய்ப்புள்ளதோ என்று யாருக்கும் எந்த சந்தேகமும் வந்துவிடக்கூடாது என்பதால் இன்று ஒரு அறிவிப்பினை கமல் வெளியிட்டுள்ளார்.

தமிழன்?
"எனக்கு பிறகு கட்சித்தலைமை பதவிக்கு எனது மகளோ, மைத்துனரோ வரமாட்டார்கள். 'நான் தமிழன்' என்பதற்காக வாய்ப்பு கேட்காதீர்கள், தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழன் என சொல்லி வாய்ப்பு கேட்பதும் குடும்ப அரசியல்தான். திறமையில்லாமல் தமிழனாக இருப்பவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. எங்கு, யாரை வைக்கிறீர்கள் என்பது முக்கியம்" என்றார்.

யாரை சொல்கிறார்?
ஆனால் இப்போது கமல் யாரை சொல்கிறார்? "வாரிசு அரசியல்" என்ற வார்த்தைக்கு பெயர்போன திமுக தலைவர் ஸ்டாலினையா அல்லது பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவிட்டு அசிங்கப்பட்டு நிற்கும் விஜயகாந்த்தையா என்பதுதான் குழப்பமாக உள்ளது!












Click it and Unblock the Notifications