எல்லோரும் வீடியோ எடுத்தார்கள்.. ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் இருவரை காப்பாற்றிய இளைஞர் கமலிடம் வேதனை
சேலம்: ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் உயிருக்கு போராடிய தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய இளைஞருக்கு போன் போட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தார்.
Recommended Video
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரியும் ஆணைவாரி நீர் வீழ்ச்சியும் உள்ளது. இதை வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.
இது ஒரு சுற்றுலா தலம் என்பதால் விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமல்லாமல் பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.

நீர் வீழ்ச்சி
அது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த நீர் வீழ்ச்சிக்கு ஏராளமான பயணிகள் வருகை தந்தனர். இதனிடையே கல்வராயன் மலைத் தொடரில் கனமழை பெய்து வருவதால் ஆத்தூரில் உள்ள ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையறியாத ஒரு பெண், அவரது 5மாதக் குழந்தை உள்பட 5 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அதிகரிப்பு
தண்ணீரின் அளவு திடீரென அதிகரித்ததை அடுத்து இவர்கள் நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறிக் கொண்டனர். தண்ணீரின் அளவு அதிகமானதை அடுத்து அவர்கள் இருவரும் பாறையில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல் ரகுமான் என்ற ஒரு இளைஞர் அந்த நீர் வீழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முன் வந்தார். தனது நண்பர்களுடன் இந்த முயற்சியில் களமிறங்கிய போது இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கரணம் தப்பினால் மரணம்
எனினும் அவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பாறை முழுக்க ஈரமாக இருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் இந்த இளைஞர்களை வந்துவிடுமாறு அழைத்தும் அவர்கள் தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியிருந்தார்.இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சார்
இந்த துணிச்சலான சம்பவத்தில் ஈடுபட்ட அப்துல் ரகுமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வணக்கம் சார் நான் அப்துல் பேசுகிறேன் என்கிறார் அந்த இளைஞர். அதற்கு கமல்ஹாசன் , வணக்கம் நீங்கள் வனத்துறை அதிகாரியாக இல்லாமல் போனது மிகவும் சந்தோஷம். எதுக்கு சொல்கிறேன் என்றால், எல்லாருக்கும் கடமை இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொண்டு செய்திருக்கிறீர்கள்.

ஆர்வம்
கரையேற முடியாமல் தவித்த அந்த இருவரும் இறந்து போயிருக்கலாம். அந்த வழியில் நீங்களும் போயிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் துணிந்து செய்யும் ஆர்வம்தான் அரசியலுக்கு வேண்டும், நமது நாட்டுக்கும் வீட்டுக்கும் வேண்டும். உங்களை பாராட்டுவதால் என் கட்சியில் சேருங்கள் என நான்சொல்லவில்லை. அரசியலுக்கு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன். இந்த துணிச்சலை மாத்திரம் கைவிட்டுவிடாதீர்கள். அங்கிருந்தவர்கள் எல்லாம் விட்டுவிடுங்கள், போகாதீங்கள் என சொல்கிறார்கள்.

கடினமான காரியம்
ஆனால் அதையும் மீறி நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள். அவர்களை காப்பாற்றுவது கடினமான காரியம் என்பதால் உங்களை தடுத்து எளிதான காரியத்தை மக்கள் செய்கிறார்கள். எனக்கு பார்த்ததும் கோபம்தான் வந்தது என்றார் கமல்ஹாசன், அப்போது அப்துல் பேசுகையில், நீங்கள் அந்த ஸ்பாட்டில் இருந்திருந்தால் இன்னும் கோபமடைந்திருப்பீர்கள் சார், எல்லாரும் அந்த குழந்தையையும் தாயையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.எனக்கு மிகவும் அசிங்கமாக இருந்தது என்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
அதற்கு கமல்ஹாசன், ஆமாம் அது மிகவும் பொறுக்கித்தனம். என்னால் ஏற்கவே முடியாது. இதை நான் பல முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட சொல்லியிருக்கிறேன். விபத்தில் ஒருவர் அடிபட்டு கிடக்கும் போதும் அங்கு வீடியோ எடுப்பார்களே தவிர அவர்களை காப்பாற்ற முன் வர மாட்டார்கள். நீங்கள் சம்பளத்துக்காகவும் மெடலுக்காகவும் வேலை பார்க்கவில்லை. உங்களுக்கு ஏதும் ஆகாமல் நீங்கள் நல்லபடியாக திரும்பி வந்ததற்கு இயற்கைக்கு நன்றி என கமல்ஹாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications