தனித்ததோர் ஆலயம்.. வணிக நோக்கமின்றி தனது அய்யனை இசையால் குளிப்பாட்டும் கலைஞர்.. கமல் பாராட்டு
சென்னை: லாக்டவுனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் நாகசுவர இசை கலைஞர் ஒருவர் ஒரு ஆலயத்தில் எந்தவித வணிக நோக்கமுமின்றி தன் அய்யனை (கடவுளை) இசையால் குளிப்பாட்டி வருகிறார் என கமல்ஹாசன் கவிதை நடையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் லாக்டவுனால் அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஓரளவு தளர்வுகள் கொடுக்கப்பட்ட போதிலும் திருமணம் உள்ளிட்ட சுபவிசேஷங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் வாழ்வாதாரத்தை பெற்று வந்த மேள கலைஞர்கள், நாகசுவர கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், மேடை பாடகர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பாகனேரியில் ஒரு கோயிலில் நாகசுவர இசை கலைஞர் பாகனேரி பிள்ளப்பன் தினமும் வாசித்து வந்துள்ளார். தற்போது அதற்கான ஊதியம் கிடைக்காத நிலையிலும் வணிக நோக்கமின்றி அவர் தனது கடமையை செய்து வருகிறார். இதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
அவர் தனது ட்விட்டரில் கவிதை வடிவில் கூறியிருக்கையில்
தனித்ததோர் ஆலயம்!
ஆட்கூட்டம் அதிகமில்லாத
ஒரு தலம்.
ஒரு
தனிக் கலைஞன்
தன் இசையை
வணிக நோக்கு எதுவுமின்றி,
தன் அய்யனை
இசையால்
குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றான்.

இவன்
ஆழ்மனக் கவலைகளை விசாரித்தறிவார் இல்லாததால்,
தன்
இசைக்கருவியை
தன்
சோகத்தின், பக்தியின், விரக்தியின்
கழிப்பிடமாக கருதுகிறான்.
அவன் தன்
ஆலயமும்
அதுவே!!!
அன்றாடம் அவன்
அர்ப்பணிக்கும் அர்ச்சனையும்,
இவன்
மல்கித் திளைக்கும் அத்தெய்வமும்
நிஜமென்றால்...
தினம்
கர்ப்பக்கிரகம் விட்டிறங்கி,
இவன்
அருகிலமர்ந்து
தோள் சாய்ந்து காதலிக்கும் அது!
இது
போலத்
தனித் தபசில்
மகரிஷிகள், தெய்வங்களைத் தேடியலைகையில்,
நம் கண்ணில்
பட்டும் படாது
கேட்டும் கேளாது
எத்தனை
மட்டுப் பட்டுப் போனது
நம் கலைகள்!
விலாசமின்றி வீசும் வியாபாரக் காற்றில் கலைந்தும் மாய்ந்தும் போகிறார்கள்
மகாகவிகள்
இவ்வாறு கமல்ஹாசன் கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications