அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ1000 கோடி- இது யாருடைய இந்தியா? மத்திய அரசை நேரடியாக தாக்காத கமல்ஹாசன்
சென்னை: அதானியின் ஒருநாள் வருமானம் ரூ1,000 கோடி எனில் இது யாருடைய இந்தியா? என மத்திய அரசை குறிப்பிடாமல் தாக்கி உள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடக்கம் முதலே வலதுசாரியாகவும் இல்லாமல் இடதுசாரியாகவும் இல்லாமல் நடுநிலை என்ற நிலைப்பாடுடன் செயல்படுவதாக கமல்ஹாசன் கூறிவருகிறார். பொதுவாக மத்திய பா.ஜ.க. அரசை பெயரை குறிப்பிட்டு விமர்சிப்பதை கமல்ஹாசன் செய்வதும் இல்லை.

கமலின் பூடக பதிவுகள்
கமல்ஹாசன் ட்விட்டர் பக்கங்களில் பார்த்தால் எந்த கட்சியை விமர்சிக்கிறார் என சொல்ல முடியாத அளவுக்குதான் பூடகமான அவரது பதிவுகள் இருக்கும். உதாரணமாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை எடுத்துக் கொள்ளலாம்,

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் குறித்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களின் வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளின் வயது குறைந்த பட்சம் 50 ஆண்டுகள். உள்ளூர் பிரச்சனைகள் அப்படியே நீடிக்கின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் சிறிதும் மாறவில்லை என்பதை 'உள்ளாட்சி - உரிமைக்குரல்' பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினேன் என பொத்தாம் பொதுவாக கழகங்கள் ஆட்சி என்கிறார். அதேபோல் கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

நீட் விவகாரம்
நீட் தேர்வை கமல்ஹாசன் கடுமையாக எதிர்க்கிறார். "சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்கொல்லித் தேர்வு நீட் என்கிறார். ஆனால் என்ன காரணத்தாலோ மத்திய பா.ஜ.க. அரசை நீட் தேர்வு விவகாரத்தில் விமர்சிக்காமல் மய்யமாகவே அவரது அறிக்கை பேசுகிறது. ஒருவேளை இப்படித்தான் மய்யவாதம் இருக்குமோ என்பதும் தெரியவில்லை.

அதானி- யாருடைய இந்தியா?
இன்றும் கூட ஒரு பதிவை போட்டுள்ளார் கமல்ஹாசன். அதில், தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்வி மத்திய அரசுக்குதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை வெளிப்படையாக சொல்லத்தான் முடியாமல் மய்யவாதம் கமல்ஹாசனை தடுக்கிறது போல என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications