நீட், கொரோனா- கிசான் திட்ட முறைகேடு-10 பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் பதிலை கேட்கும் கமல்ஹாசன்
சென்னை: நீட் தேர்வு, கொரோனா மற்றும் கிசான் திட்ட முறைகேடுகள் உட்பட 10 பிரச்சனைகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
அதிகார நோக்குடனும் மக்கள் நலன் மீதான அலட்சியத்துடனும் அரசு இருந்தால் நம் கடமை ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே. சட்டமன்ற கூட்டத் தொடரின் போது மக்கள் நலன் கருதி அரசின் முன் நாம் வைக்கும் கேள்விகள்.
1. நீட் தேர்வு இல்லை: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி எடுக்காமலும் நீட் தேர்விற்கு தடை வாங்குவதற்கு இருக்கின்றன நேர்மையான காரணங்களை வைத்து மத்திய அரசினை வழிக்கு கொண்டு வராமலும் மாணவ மாணவியருக்கு தேர்வுக்கான முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் தரத் தவறிய இந்த அரசால் இன்னும் எத்தனை மரணங்களை தமிழகம் தாங்கும்? நிவாரணம் கொடுப்பதன் மூலம் பிரச்சனையை மூடி மறைக்க நினைக்கிறதா தமிழக அரசு?

கிஸான் திட்டத்தில் முறைகேடு
2. கிஸான் திட்ட முறைகேடு: வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கான உதவித் தொகையை உண்மையான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்க தவறியதன் மூலம் தன் ஊழல் முகத்தை கொரோனா காலத்தில் கூட அரசு காட்டுவது முறையா? 3. ஆன்லைன் கல்வி முறைப்படுத்துதல் ஆன்லைன் கல்வி முறையினை முறைப்படுத்தாமலும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளை மேம்படுத்துவது போன்ற மிக முக்கியமான திட்டங்களை முன்வைக்காமலும் அரசு அலட்சியப் போக்கு காட்டுகின்றன. இவற்றை நெறிப்படுத்த இந்த அரசு என்ன செய்யப் போகின்றது?

கை கழுவியதா அரசு?
4. கொரோனா முறைகேடுகள்: முன் எச்சரிக்கை இல்லை, பாதுகாப்பு நடவடிக்கைகளில் முறையான சிந்தனை இல்லை. மக்களை கைகளை கழுவச் சொன்ன அரசு இப்போது மக்களை கைகழுவிவிட்டது ஏன்? கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு அரசு சொல்லும் பதில்தான் என்ன? 5. எட்டு வழிச்சாலைக்கு எதற்காக இத்தனை அவசரம்?கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலும் விவசாயத்துறையில் 3.4 சதவீதம் வளர்ச்சி எட்டிய நிலையில் எட்டு வழிச்சாலையை அமல்படுத்த ஏன் இந்த அரசு துடிக்கிறது?

மீனவர் பாதுகாப்பு கவனம்
6. மீனவர்கள் பாதுகாப்பு: பருவகால மழையினாலும் புயலினாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் மீனவர்களே. எனவே அவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்புக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்த அரசு எப்போது கவனம் செலுத்தும்? 7. வேலைவாய்ப்பின்மை: வரலாறு காணாத ஜிடிபி சரிவில் இருந்து மீள, வேலைவாய்ப்புகள் உருவாக்க என்று என்ன திட்டம் இந்த அரசு வைத்துள்ளது?

டாஸ்மாக் மூடல் எப்போது?
8. மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி தமிழகத்திற்காக பங்குகளை பெறுவதில் அழுத்தம் ஏன் இல்லை? மாநில அரசு அழுத்தம் தராமல், மத்திய அரசிடம் நிதி பெறுவது சாத்தியம் இல்லை. ஜிடிபி வீழ்ச்சியால் ஜிஎஸ்டி பங்கை பெறும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர யோசிப்பது ஏன்? 9. அம்மா அரசாங்கம் டாஸ்மாக்கை எப்பொழுது மூடத் துவங்கும்? அரசின் வருவாய்க்கு ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை கொரோனா காலத்திலும் திறந்து மக்களிடம் இருந்து பணம் பிடுங்க ஏற்பாடு செய்தீர்கள். எப்போது உங்கள் அம்மா சொன்னதைப் போல டாஸ்மாக் மூடுவதை தொடங்கப் போகிறீர்கள்?

தமிழக அரசு பதில் தருமா?
10. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேடு பள்ளமான சாலைகள், முறையற்ற மற்றும் பணி முடியாத மழைநீர் வடிகால் கால்வாய்கள், பரவும் டெங்கு.. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்து இருக்கிறீர்கள்? இது போன்ற மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல் குறுகிய காலத் தொடரென்று இவ்வளவு குறிக்கி 3 நாட்களில் கண்துடைப்பாக சட்டமன்ற தொடரை நடத்தி முடிப்பது ஏன்? மக்கள் சார்பாக மக்களுடன் நின்று மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக அரசிடம் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுமா தமிழக அரசு? இவ்வாறு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications