Thug Life: கர்நாடகாவில் ஜூன் 5ல் தக்லைஃப் ரிலீஸ் இல்லை! கமல்ஹாசன் வழக்கு ஜூன் 10க்கு ஒத்திவைப்பு
சென்னை: கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கலாமே என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியிருந்த நிலையிலும் அவர் மன்னிப்பு கேட்காததால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ரிலீஸ் செய்வதை ஒத்தி வைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் வாதத்தில் தெரிவித்துள்ளது.

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் பேசியிருந்ததை அடுத்து தக் லைப் படத்திற்கு கர்நாடகாவில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி கமல்ஹாசன் தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடியது.
இந்த வழக்கு நீதிபதி நாக பிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில், தக் லைப் படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?
கமல்ஹாசனாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி இது போல் மக்கள் மனம் புண்படும்படி பேசக் கூடாது. ரூ 300 கோடி போட்டு படம் எடுத்திருந்தால் கமல் மன்னிப்பு கேட்கலாமே! கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்து சில கோடி லாபம் பார்க்க வேண்டும் என்றால் மன்னிப்பு ஒன்றுதான் தீர்வு என நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்கப்படும் என சொல்லப்பட்டது. இதனால் கமல் மன்னிப்பு கேட்பார் என கருதப்பட்டது.
இதனிடையே கன்னடம் குறித்து தான் பேசியது ஏன் என்பது குறித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் , "கன்னடத்தை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் நோக்கத்தில்தான் நான் அவ்வாறு பேசினேன். நான் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. பொது அமைதியின்மை, விரோதத்திற்கு நான் எப்போதும் இடம் கொடுக்க மாட்டேன். என்னால் சிவராஜ்குமாருக்கு தர்மசங்கடம்.
நான் அவர் மீது உண்மையான பாசத்துடன் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் சிவராஜ்குமார் பல்வேறு அவமானங்களை சந்தித்தது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியிடம், கமல் எழுதிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை வாசித்து பார்த்த நீதிபதி நாக பிரசன்னா, இந்த கடிதத்தில் மன்னிப்பு என்பதே இல்லை. இது வர்த்தக சபைக்கு அவர் எழுதிய விளக்க கடிதம்.
மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைக்கிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்குமாறு நீதிமன்றம் கேட்கவில்லை. பிலிம் சாம்பர்தான் கேட்கிறது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸை ஒத்தி வைக்கிறோம். ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications