தமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்
Recommended Video
சென்னை: தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று சொன்ன முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று அளித்த பேட்டியின்போது, "இந்த பேட்டியில் தமிழ்மொழி விவகாரம் பற்றி பேச விரும்புகிறேனே தவிர சுப்பிரமணியன் சுவாமி பற்றி பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தி திணிப்பு பற்றி கமல்ஹாசன் தெரிவித்த கருத்தை சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்திருந்த நிலையில், பேட்டியின் ஆரம்பத்திலேயே இவ்வாறு கமலஹாசன் தெரிவித்துவிட்டார்.

மொழி மாறிவிட்டார்
இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழர்கள் நன்றி மறந்தவர்கள், கொண்டாட தெரியாதவன் தமிழன் என்று தெரிவித்த கருத்து பற்றி, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன். "அப்படியா.. அவர் மொழி மாறிவிட்டார் என்று நினைக்கிறேன்" நன்றி இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

விட்டுத் தரமாட்டோம்
மேலும் அவர் கூறியதாவது: தமிழ் நமது கவுரவம், தமிழ் தான் நமது மொழி, அதை விட்டுக்கொடுக்க முடியாது. இந்தியா குடியரசு ஆகும் போதே, இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் மொழி அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. அதை தற்போது மாற்ற முடியாது.

மாணவருக்கு பதற்றம்
5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற முடிவை, கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் இதில் என்ன சொல்கிறதோ இல்லையோ, மாணவர்களிடம் கேட்டால், இதற்கான பதில் கிடைத்துவிடும். உலகம் முழுக்க, மாணவர்களுக்கு கல்வி எப்படி போதிக்கப்பட வேண்டும் என்பதை மாற்றியமைத்து சீரமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதுவும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டதற்கான காரணமாக பலர் சொல்வதற்கு பொதுத்தேர்வு தான் காரணம். பொதுத் தேர்வை நினைத்து பதட்டப்பட்டு பலரும் பாதியில் படிப்பை விட்டு விடுகிறார்கள். எனக்கெல்லாம் மூன்று வருடம் முன்பே பதட்டம் வந்துதான், எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். இந்த பதற்றம் பெற்றோரையும் தொற்றிக் கொள்ளும் என்பது தான் உண்மை.

திட்டம்
மொழியை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்த திட்டம் இருக்கக்கூடும். அல்லது பொருளாதாரம் கீழ் நோக்கி செல்வதை மக்கள் கண்முன் இருந்து மறைப்பதற்காக மற்ற பிரச்சினைகளை முன் வைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. தமிழகம் எப்போதுமே மொழியைப் போற்றுவதற்காகவும், தேவைப்பட்டால் போராடுவதற்கும் தயாராகவே இருந்துள்ளது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.

மொழி திணிப்பு
எந்த மொழியை வேண்டுமானாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதுதான் மொழி என்று திணித்தால் அதை ஏற்க முடியாது. நான் இந்தி படத்தில் நடித்தேன். அதை நான் விரும்பி செய்தேன். அதேபோல, நான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பள்ளி மாணவன் தான் என்பதையும் மறுக்க முடியாது. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications