கமல் பிரச்சாரத்தில் இதைக் கவனிச்சீங்களா.. எல்லாவற்றிலும் புதுமையை புகுத்துறாரே "ஆண்டவர்"!
சென்னை: கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் புதுமையான விஷயங்களை புகுத்துகிறார். அவர் பிரச்சாரத்தின் டிரென்டையே மாற்றுகிறார் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 13 ஆம் தேதி தொடங்கினார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள், சுற்றுப்புற மாவட்டங்களில் பிரச்சாரங்களை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அது போல் சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

திறந்தவேனில் பிரச்சாரம்
இன்றைய தினம் காஞ்சிபுரம், செய்யார், செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் சாலை பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார். இந்த பிரச்சாரங்களில் திறந்தவேனில் பேசும் கமல்ஹாசன் தான் செல்லும் மாவட்டங்களின் விவரங்களை முதலில் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

கோரிக்கைகள்
அங்குள்ள பிரச்சினைகள், அந்த மக்களின் கோரிக்கைகளை அறிந்து கொண்டு பேசுகிறார். அந்த பகுதிகளில் நடக்கும் சாலை வசதிகள், மேம்பாலம் கட்டும் பணிகளையும் பார்வையிடுகிறார். நேற்றைய தினம் ஈசிஆர் சாலையில் கால்வாய் பணியை பார்வையிட்ட அவர் அந்த கட்டுமான பணியை விமர்சித்தார்.

அன்புக்காக கூடிய கூட்டம்
அது போல் இவர் ஒரு இடத்தில் பேசுவதை மற்ற இடங்களில் பேசுவதில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் வெவ்வேறு விஷயங்களையே பேசுகிறார். இதை கேட்கவும் இவரை பார்க்கவும் ஏராளமானோர் கூடுகிறார்கள். காசு கொடுத்தால் கூட அந்த அளவுக்கு கூடாத கூட்டம் தனது அன்புக்காக கூடியிருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் கமல்.

சுற்றுப்பயணம்
அரசியலில் புதிய டிரென்டை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சி தொடங்கியதும் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர் அங்குள்ள பொது பிரச்சினைகளை குறித்து வைத்து கொண்டார். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கட்சியினருக்கு மத்தியில் தேர்தலுக்கு முன்பே சூறாவளிக்கு சூறாவளி போல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதால் இவருக்கு அங்குள்ள மக்களின் குறைகள் அனைத்தும் அத்துப்படி.

வார்த்தை ஜாலங்கள்
அதனால்தான் இடத்திற்கு இடம் இவரால் மாற்றி மாற்றி பேச முடிகிறது. சென்னையில் ஒன்று பேசுகிறார், காஞ்சிபுரம் சென்றால் கூவத்தூர் கூத்து குறித்து பேசுகிறார். விமர்சனங்களை முன் வைக்கும் போது தனது வார்த்தை ஜாலங்களால் புதிய புதிய விஷயங்களை பேசி வருகிறார். இதுவரை அரசியல் கூட்டங்கள் என்றால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது மற்றொருவர் இன்னொருவரை திட்டுவது என பார்த்தே பழகிய மக்களுக்கு கமல்ஹாசன் பேசும் தொகுதி அலசல் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு அவர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டமே சாட்சி.












Click it and Unblock the Notifications