"வடசென்னைக்கு ஆபத்து".. 2017-இல் வேதனைப்பட்ட கமல்.. போட்டியிட்டு ஆபத்பாண்டவர் ஆவாரா "ஆண்டவரு"?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிச்சயம் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார். அவர் போட்டியிடும் தொகுதி எது என்பது இன்று அறிவிக்கப்படுகிறது. வடசென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என தெரிகிறது.
பொதுவாக சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி கட்சியின் தலைவர், முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதிகள் பெரிதும் மக்களின் கவனத்தை ஈர்க்கும்.
அதிலும் சினிமா பிரபலங்கள் போட்டியிட்டால் சொல்லவே வேண்டாம் அது நட்சத்திர தொகுதியாகவே அறியப்படும். அந்த வகையில் தேர்தலுக்கு ஆயத்தமாகும் போதே தான் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

கமல்ஹாசன்
இதனால் இவர் போட்டியிடுவது எங்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி என்பதால் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் எம்ஜிஆர் குறித்து தனது பிரச்சாரங்களில் பேசும் கமல்ஹாசன் அவர் போட்டியிட்டு வென்ற பழைய ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின.

வேட்பாளர்கள்
இந்த நிலையில் நேற்று முன் தினம் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்கான வெளியானது. இதில் பரமக்குடி தொகுதி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கமல் பரமக்குடியில் போட்டியிட மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது. இதனால் அவர் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு
டிடிவி தினகரன் எப்படி சம்பந்தமே இல்லாமல் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக வித்தியாசமாக அறிவித்தார். அது போல் இவரும் எங்கு போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கிய கட்சிகள் போட்டியிடும் தொகுதியா இல்லை கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவாரா? என தெரியவில்லை.

குற்றச்சாட்டு
அரசியலை தொடங்குவதற்கு முன்னர் 2017-ஆம் ஆண்டு வடசென்னையில் எண்ணூர் கடல் பகுதியில் நிலக்கரி சாம்பல் கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த பகுதியில் ஆய்வு செய்தார் கமல். மீனவ மக்களுடன் உரையாற்றினார். இதையடுத்து தனது ட்வீட்டில் எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன என குற்றம்சாட்டியிருந்தார்.

வடசென்னையில் கமல் போட்டி?
அது போல் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வடசென்னையில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜனை ஆதரித்து செம்மஞ்சேரி பகுதியில் பிரச்சாரம் செய்த கமல், அப்போதும் சுற்றுப்புறச்சூழல் மாசு, நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பேசியிருந்தார். மேலும் அப்போது தனக்கு பரிட்சயமான இந்த பகுதி இப்போது இப்படியிருக்கிறதே என வேதனையும் தெரிவித்தார். எனவே வடசென்னைக்குள்பட்ட சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications