மெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்.. கமல் நெத்தியடி
மெகா கூட்டணி என தாங்களே சொல்லி கொள்ள கூடாது என கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெகா கூட்டணியா இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டுமே தவிர, தாங்களே சொல்லிக் கொள்ள கூடாது என்று கமல்ஹாசன் அதிமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிடும் மய்ய வேட்பாளர்களின் பட்டியலை வரும் 24-ம் தேதிக்குப் பிறகு வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து அவர் பேசியபோது சொன்னதாவது: பல இடங்களில் கொடி ஏறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை எங்கே ஏற்ற வேண்டும் என்ற இலக்கு மக்களுக்குதான் தெரியும்.
நல்ல தொடர்பு
இந்த ஓர் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. மக்களிடையே எங்களுக்கு நல்ல தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் என்னை ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறார்கள்.
நாம் நிற்போம்
இந்த மக்கள் பலம் இருப்பதால்தான் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்தேன், தனியே நிற்போம் என்றால் நான் தனித்து அல்ல.. நாம் நிற்போம்... என்பது!
புத்துயிர் இருக்கிறது
மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால் கணிப்புகளை தாண்டி ஆதரவு உள்ளது, மக்கள் என் கையை பிடித்து நாடி பார்த்தில் புத்துயிர் இருப்பதால் நம்பிக்கையுடன் அனுப்பி இருக்கிறார்கள்" என்றார் கமல்ஹாசன். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கமல் சொன்னதாவது: மெகா கூட்டணி என்கிறார்கள். அது மெகா கூட்டணியா இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது.
24-ம் தேதி
வரும் 24ம் தேதிக்கு பிறகு மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். அதில் கண்டிப்பாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மக்கள் நலன் என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் ஆகும். கொள்கைகளை கட்டுக்கட்டாக புத்தகம் போட்டவர்கள் தற்போது அதை பறக்க விட்டு விட்டனர். கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு கூட்டணி பேசுகிறார்கள்" என்று கமல்ஹாசன் கடுமையாக சாடினார்.