அந்த பேச்சு இப்போதும் இருக்குது.. கமல்ஹாசன் பேட்டியில் சொன்ன ஒற்றை வார்த்தை.. திமுக ஷாக்
Recommended Video

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதற்கான கதவுகளை, அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் என்னும் திறந்து வைத்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த நடவடிக்கையின் மூலமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி நடுவே இண்ணமும் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்றே தெரிகிறது..
மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெயர் தெரிவிக்கவில்லை
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாஸனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். அப்போது, ஒத்த கருத்து கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று நீங்கள் கூறியுள்ளீர்களே, எந்த கட்சி உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறது என்று நிருபர்கள் வினவினர். இந்த கேள்விக்கு கமல்ஹாசன் நேரடியாக பதிலளிக்கவில்லை. இப்போதைக்கு கட்சிகளின் பெயரை தெரிவிக்க முடியாது என்று மட்டும் கூறினார். ஆனால் மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியமானது.

பேச்சு இருக்கிறது
காங்கிரஸ் கட்சியுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக முன்பு பேச்சு இருந்ததே என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், இப்போதும் அந்தப் பேச்சு இருக்கிறது. ஆனால் நாங்கள் முடிவெடுத்த பிறகு தெரிவிப்போம் என்றார். இதன் மூலமாக காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சு என்பது இன்னும் இருப்பதாக கமல்ஹாசன் சந்தேகமின்றி தெரிவித்துள்ளார்.

சந்திப்பு
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன், கமல்ஹாசன் ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் சந்திப்பு நிகழ்த்தியிருந்தார். எனவே திமுக உடனான கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனைகள் எழுமானால், கமல்ஹாசன் கட்சி, டிடிவி தினகரன் கட்சி போன்ற புதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு லோக்சபா தேர்தலை எதிர் கொள்ளலாம் என்று ராகுல்காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

திமுவின் தர்ம சங்கடம்
அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியை விட்டு கொடுக்க திமுகவுக்கு மனம் கிடையாது. எனவே தான் காங்கிரஸ் அறிவிப்பு முன்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கடந்த வாரம் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை மகிழ்ச்சிப்படுத்தினார். இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுதி என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால், கமல்ஹாசன் இன்று அளித்த இந்த பேட்டியை வைத்து பார்க்கும்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது முற்றிலும் உறுதியாகவில்லை என்றே தெரிகிறது.

திமுக, பாஜக
ஏனெனில் கமல்ஹாசன் ஏற்கனவே ஒருமுறை கூறிய வார்த்தைகள் முக்கியமானவை. "எங்கள் கட்சி கொள்கைகள் மிகவும் வலிமையானவை. இதனுடன் ஒத்துப்போகும் கட்சிகள் கிடைப்பது கஷ்டம்" என்று கூறியிருந்தார் கமல்ஹாசன். திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் மரபணுவை மாற்றக்கூடிய கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் கூறிவிட்டார். இடதுசாரி சிந்தனை கொண்ட கமல்ஹாசன் பாஜகவை தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மட்டுமே
நீண்டகாலமாகவே, அதிமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் கமல்ஹாசன். எனவே அவரிடம் எஞ்சியிருப்பது காங்கிரஸ் உடனான கூட்டணி வாய்ப்பு மட்டுமே. இதை நோக்கி அவர் செயல்படுவது இன்றைய பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. இது திமுகவிற்கு ஷாக் தகவல்தான். எனவே, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்பது தொகுதி பங்கீடுக்கு பிறகே, உறுதி ஆகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒருவேளை கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஒரு துருப்புச் சீட்டு போல பயன்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications