நேர்மையானவர்களுக்கு ஓட்டு.. எல்லா வோட்டிங்கிலும் இதை ஃபாலோ செய்யணும்.. பொடி வைத்து பேசிய கமல்ஹாசன்
சென்னை: வருங்காலத்திலும் நேர்மையானவர்களுக்கு ஓட்டு போட்டால் தமிழகம் சீரமையும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சினிமா துறையில் பல அவதாரங்களை பூசிக் கொண்ட கமல்ஹாசன் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வர எண்ணினார். அதன்படி அரசியல் கட்சியையும் 2018-ஆம் ஆண்டு தொடங்கினார். அதற்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் சூட்டினார்.
2017 ஆம் ஆண்டு முதல் நீட், டெங்கு காய்ச்சல், ஹைட்ரோகார்பன், நெடுவாசல், மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்டவைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
கணிசமான வாக்குகள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனும் அவர் கட்சியினரும் போட்டியிடவுள்ளார்கள். இதனால் கமல்ஹாசன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் பேராதரவு
அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அன்பை பெற்றுவருவதாக கூறுகிறார். தனது பிரச்சாரத்தில் அவர் வைக்கும் கோரிக்கை என்னவெனில் வாக்குரிமை நமது ஆயுதம், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் 5 ஆண்டுகளுக்கு நாம் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும் என பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்.
அறிவிப்புகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் அரசியல் பேசாமல் இருந்ததில்லை. போட்டியாளர்களை சொல்வது போல் சில விஷயங்களை மற்ற அரசியல்வாதிகளை சாடி பேசுவார். அந்த வகையில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த அறிவிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோம், ரம்யா
அதில் 5 போட்டியாளர்களில் சோம், ரம்யா பாண்டியன், ரியோ ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் மீதமிருந்த இருவர்களான பாலாஜி, ஆரியில் வெற்றியாளராக ஆரியை அறிவித்தார். அப்போது கமல்ஹாசன் கூறுகையில் மக்கள் வாக்களிப்பு மூலம் நேர்மையானவரை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நேர்மையானவர்
இது போல் எங்கெல்லாம் வாக்களிப்பு நடக்கிறதோ அங்கெல்லாம் நேர்மையானவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகம் சீரமையும். நாளை நமதே என சொல்லி முடித்தார். அதாவது வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலிலும் மக்கள் நேர்மையானவர் என யாரை கருதுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கமல் கோரியுள்ளார்.