வாசலில் இதை எழுதி மாட்டுங்கள்.. நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்.. கமல் பொளேர்
சென்னை: "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என கமல்ஹாசன் ட்விட்டரில் கொதித்தெழுந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திமுகவும், 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு அணியும் தனியாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இந்த அணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். குறிப்பாக திமுகவையும் ஸ்டாலினையும் அவர் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று விமர்சனம் செய்தார். தப்பில்லாமல் ஸ்டாலினால் தான் எழுதி தருவதை படிக்க முடியுமா என்று கொளத்தூரில் கமல் சவால் விட்டார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் "எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்" என்று கூறியுள்ளார்.