யார் அமைச்சராக இருக்கணும், இருக்கக் கூடாதுனு முடிவு செய்வது முதல்வர்தான்.. ஆளுநரை விமர்சித்த கனிமொழி
சென்னை: யார் அமைச்சராக இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்வது முதல்வர்தான், நீங்கள் அல்ல என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு 90 சதவீதம் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனிடையே செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து மனைவி மேகலா, தனது கணவருக்கு காவேரி மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றம் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டதை அடுத்து செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சார துறை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக வழங்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் பரிந்துரை செய்தார். எனினும் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தெரியவந்தது.
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்கவேண்டும்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 16, 2023
தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு கூடுதல் துறைகளை வழங்க ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட அவர் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றும் ஆளுநர் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு திமுகவும் கூட்டணி கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆளுநராக இருக்கும் ரவி அவர்களுக்கு அதை முடிவு செய்யும் எந்த அதிகாரமுமில்லை. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர் மதிக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications