முதல்முறையாக லோக்சபா தேர்தலில் போட்டி.. தூத்துக்குடியில் வெற்றி முத்தை அள்ளி வருவாரா கனிமொழி!
சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதியின் வேட்பாளராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக அவர் தேர்தல் களத்தில் நிறுத்தப்படுகிறார்.
லோக்சபா தேர்தலில் முதல்முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக 2007-ஆம் ஆண்டு இவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதிக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் மகளாக கடந்த 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி பிறந்தவர் கனிமொழி. இவர் தந்தையை போல் இலக்கிய ஞானம் பெற்றவர்.
சட்டசபை இடைத் தேர்தல்.. 18 திமுக வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்
பணி
சர்ச் பார்க் பள்ளியில் படித்த கனிமொழி எத்திராஜ் கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். திமுக மகளிரணித் தலைவராக உள்ள கனிமொழி, அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தி இந்து, குங்குமம், சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் செய்தித்தாளான தமிழ் முரசு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
பேரவைத் தலைவர்
ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
குற்றப்பத்திரிகை
இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது பெயர் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தது.
திகார் சிறை
இதையடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கவிதை படைப்பு
இதில் கனிமொழி, ஆ. ராசா உள்பட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.