நம்ம ஊரு திருவிழா! முதலமைச்சர் ஸ்டாலின் தந்த முக்கிய அசைன்மெண்ட்! களமிறங்கிய கனிமொழி எம்.பி.!
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
தன்னை நம்பி கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை சிறப்புடன் செயல்படுத்தும் பொருட்டு கனிமொழி எம்.பி. களமிறங்கி களப்பணிகளை தொடங்கிவிட்டார்.
இது தொடர்பான விவரத்தை பார்க்கலாம்.

பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையின்போது தமிழக நாட்டுப்புறக் கலையின் கலாச்சார திருவிழாவான 'நம்ம ஊரு திருவிழா' சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த நாட்டுப்புற கலை விழாவை முன்னின்று நடத்தக்கூடிய பொறுப்பை கனிமொழி எம்.பி.வசம் ஒப்படைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது போன்ற நிகழ்வுகளை குறிப்பாக நாட்டுப்புற கலை விழாக்களை ஒருங்கிணைப்பதில் கனிமொழி எம்.பி.க்கு நிறையவே ஆர்வம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

களமிறங்கிய கனிமொழி
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை சங்கமம் என்ற பெயரில் கலை விழாக்களை நடத்தியவர் கனிமொழி என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இந்த ஆண்டு பொங்கல் விழாவின் போது சென்னையில் நம்ம ஊரு திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய கனிமொழி எம்.பி. நேரடி கள ஆய்வையும் தொடங்கிவிட்டார்.

கனிமொழி கள ஆய்வு
அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் 'நம்ம ஊரு திருவிழா' நடத்துவதற்கான கள ஆய்வு மேற்கொண்டார் கனிமொழி. நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022- 2023ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன் அறிவிப்பு
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் 'நம்ம ஊரு திருவிழா'வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து,மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications