எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சறுக்கல்.. கனிமொழி மீது தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் உத்தரவு
கனிமொழி மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
சென்னை: திமுக எம்பிக்கள் கனிமொழி,தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், அதிமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தபடியே வந்தது திமுக.. இதற்கு அதிமுக அரசும் பதிலடி தந்து வந்தது.
ஒருகட்டத்தில் யார் ஊழல் செய்தது என்பது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கடுமையான வார்த்தை போரும் விஸ்வரூபம் எடுத்தது.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும் சரி, திமுகவின் ஊழல்கள் குறித்து பேசி கொண்டே இருந்தார்.. கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்..

வார்த்தை போர்
"ஸ்டாலின் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.. அதேபோல் நான் கேட்கும் கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்... அதிமுக பற்றி குறைசொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை. 10 வருடமாக ஆட்சியில் இல்லாததால் திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர்... மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வருவதற்காக சிவாஜியை மிஞ்சி நடிக்கிறார் ஸ்டாலின்.. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது" என்றெல்லாம் காட்டமாக பேசினார்.

ஆர்ப்பாட்டம்
அதேபோல, திமுகவும் சளைக்காமல் அதிமுகவை விமர்சித்தது.. கடந்த 2018-ல் இதற்காகவே திமுக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.. அப்போது குப்பையிலும் ஊழல் செய்யுதுள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கனிமொழி எம்பி குற்றம்சாட்டியிருந்தார்... இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவதூறு
இவ்வழக்கில் கடந்த ஜுன் 4 ம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது... இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்று வந்தது ..அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்...

தீர்ப்பு
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கனிமொழி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளார். இதேபோல் மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications