பள்ளிகளில் இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள்.. கிருஷ்ணகிரி சம்பவத்தால் கனிமொழி ஆவேசம்
சென்னை: கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் என்ற பெயரில் முகாம் ஒன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் முகாமிற்கு சென்ற 13 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி கடந்த 8-ந் தேதி அதிகாலை பள்ளி கலையரங்கத்தில் சக மாணவிகளுடன் தூங்கி கொண்டிருந்திருக்கிறார் அப்போது அதிகாலை 3 மணி அளவில், முகாம் பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த முன்னாள் நாதக பிரமுகரான சிவராமன் (வயது 30) என்பவர் மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்தார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினாராம் கடந்த ஆகஸ்ட் 16-ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் பற்றி தெரிவித்தாராம் மாணவி. அவர் தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு பின்னர் போக்சோ பிரிவின் கீழ் பயிற்சியாளரான முன்னாள் நாதக பிரமுகர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவத்தை மறைத்த குற்றத்திற்காக, திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பள்ளி முதல்வர் சதீஷ்குமார் (35), கந்திகுப்பம் இந்திரா நகரை சேர்ந்த பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை ஜெனிபர் (35), கந்திகுப்பத்தை சேர்ந்த பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளர்களான தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கொள்ளுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (39), சூளகிரி தாலுகா அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த சத்யா (21), பர்கூர் சின்ன ஒரப்பத்தை சேர்ந்த சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் திம்மாபுரம் காந்தி நகரை சேர்ந்த சிவா என்ற சிவராமனை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர் தப்பியோட முயன்ற போது அவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால், மாவுக் கட்டு போட்டுள்ளனர் . சிவராமனால் தேசிய மாணவர் படை முகாமிற்கு சென்ற 17 மாணவிகளில், ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
கைதான பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ஆவார்.. மாணவி பாலியல் பலாத்காரம் செய்த புகார் தொடர்பாக தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே சிவராமன் என்சிசி அமைப்பில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications